பந்து திமுகவிடம் இருப்பதால் அவர்கள்தான் முடிவெடுப்பார்கள்.. அதிருப்தியில் கே.எஸ். அழகிரி..!
பத்து பைசா கூட செலவில்லாமல் கூட்டம் கூடுகிறது என்றால் அது ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு மட்டும் தான் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
பத்து பைசா கூட செலவில்லாமல் கூட்டம் கூடுகிறது என்றால் அது ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு மட்டும் தான் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தல் தேதிகள் தாமதமாக அறிவிக்கப்படும் என அரசியல் கட்சிகள் எதிர்பார்த்து இருந்த நிலையில், தேர்தல் தேதி முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. இதனால், கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம், வேட்பாளர் பட்டியல், வேட்புமனுத்தாக்கல் போன்ற விஷயங்களில் அரசியல் கட்சிகள் மும்மரமாக இயங்கி வருகின்றன.
ஆனால், திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், நாளை சென்னையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இதில், தினேஷ் குண்டுராவ், வீரப்பமொய்லி, கே.எஸ்.அழகிரி ஆகியோர் இந்த அவசர செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், கடலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ். அழகிரி;- வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை. தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக தான் முடிவு செய்ய வேண்டும். பந்து திமுகவிடம் உள்ளதால், காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து அவர்கள்தான் முடிவெடுப்பார்கள் என்றார்.
காங்கிரஸ் கட்சிக்கென்று ஒரு பலம் இருக்கிறது. அதன் பலம் என்ன என்பது ராகுல் தமிழகம் வரும் போது தெரிகிறது. பத்து பைசா கூட செலவில்லாமல் கூட்டம் கூடுகிறது என்றால் அது ராகுல் பிரச்சாரத்தின் போதுதான். காங்கிரஸ் கட்சியால் வளர்ச்சியைக் கொண்டு வர முடியும் என்று மக்கள் கருதுகிறார்கள் என்று கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.