நீங்க என்ன எம்ஜிஆர் ஆட்சிய கொடுக்கிறது… இப்ப எம்ஜிஆர் ஆட்சிதான நடக்குது…. ரஜினிக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி!!
தமிழ் நாட்டில் எம்ஜிஆர். ஆட்சி தான் நடக்கிறது என்றும் இங்கு வெற்றிடம் என்பதற்கே இடமில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்துக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மகளிரணி சார்பில், உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மகளிரணி செயலாளர் விஜிலா சத்யானந்த் எம்.பி. தலைமை தாங்கினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,
பெரியார் தமிழகத்துக்கு கிடைத்த பொக்கிஷம். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்று தருவதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றிக்கண்டவர். அப்படிப்பட்ட தலைவருடைய சிலையை சேதப்படுத்துவோம், அகற்றப்படும் என்று சொல்வது கடும் கண்டனத்துக்குரியது என்றார்.
தற்போது எல்லா தலைவர் சிலைகளுக்கும் தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தலைவர்களுடைய சிலைகள் அவமதிக்கப்பட்டால் அவர்கள் யாராக இருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் எடப்பாடி தெரிவித்தார்..
அ.தி.மு.க. ஆட்சி என்பது எம்.ஜி.ஆருடைய ஆட்சி தான். இங்கு வேறு ஆட்சியா? நடக்கிறது என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க. அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதா இந்த இயக்கத்தை இந்தியாவிலேயே முதன்மை இயக்கமாக கொண்டு வருவதற்கு அரும்பாடுபட்டார் என குறிப்பிட்டார்..
இறுதி வரை மக்களுக்காக பணியாற்றி மறைந்த இரு பெரும் தலைவர்களுடைய கட்சி தான் அ.தி.மு.க. எனவே வெற்றிடம் என்பதற்கு இடம் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.\