நோட்டாவுக்கு போடச் சொல்லி நோட்டை நீட்டியது யார்?: கேட்குமா பாஜக.,?
நோட்டா கூட, ஆர்.கே.நகரில் நேரில் வந்து, எனக்கு ஓட்டு போடுங்க என்று சொல்லி பணம் கொடுத்திருக்குமோ? என்ற ரீதியில் கலாய்க்கிறார்கள் நெட்டிசன்கள்!
நோட்டா மட்டும் பணம் கொடுக்காமல் இருந்திருந்தால், நாங்கள் முந்தியிருப்போம் என்று பாஜக., சொல்லும்.
தினகரன் பணம் கொடுத்தார் என்றால் அது கறுப்புப் பணமாக இருந்தால், அப்போது மத்திய அரசு எடுத்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வியில் முடிந்ததாகப் பொருள். அது கறுப்புப் பணம் இல்லையென்றால், தேர்தலில், அனுமதித்ததை விட அதிகம் செலவு செய்தல், மற்றும் விதி மீறல் இருக்கும்.
தமிழகத்தில் அரசியல்வாதிகள் வேண்டுமானால் தங்களின் வாக்குறுதியை மறப்பார்கள். ஆனால், மக்கள் வாக்கைக் கொடுத்துவிட்டால் (விற்று விட்டால்) அதை நிறைவேற்றியே தீருவார்கள்.
சென்ற வருடம் நோட்டுடன் போராடித் தோற்றது பாஜக., இந்த வருடம்.நோட்டாவுடன் போராடாமல் தோற்றுக் கொண்டிருக்கிறது பாஜக,
கடைசியில் பாஜகவின் எதிரி நோட்டாதானா..?!
இவை எல்லாம், நோட்டாவுக்கு எதிராக ஆர்கே.நகரில் போராடிக் கொண்டிருக்கும் பாஜக., குறித்த விமர்சனங்கள்.
ஆர்கே. நகர் இடைத்தேர்தலில் பாஜக.,வுக்குக்கும் நோட்டாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. நோட்டா பெற்றுள்ள வாக்குகளைக் கூட நெருங்க முடியாத நிலையில் பாஜக உள்ளது வியப்பானதுதான்.
ஆர்கே நகரில் பாஜக சார்பில் கரு.நாகராஜன் களமிறங்கினார். அவரை ஆதரித்து பல பகுதிகளில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சூறாவளி பிரச்சாரம் செய்தார்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப் படுவதாகக் கூறி ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார் பேட்டையில் சாலைமறியல் போராட்டமெல்லாம் நடத்தினார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து புகார் கொடுத்தார்.
இந்நிலையில் இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் 3 வது சுற்று முடிவில் பாஜக மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்று கடைசி இடத்தில்தான் உள்ளது. பாஜக வேட்பாளர்
நோட்டாவுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். இருப்பினும், நோட்டாவே முன்னிலை பெற்றுள்ளது.
3ம் சுற்று துவக்கத்தில் கரு நாகராஜன் 117 வாக்குகள் பெற்றிருக்கு நிலையில், 208 வாக்குகள் நோட்டாவுக்குக் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.