Normal life in thutukudi.petol bomn in police station
தூத்துக்குடியில் 4 நாட்களுக்குப் பிறகு சற்று அமைதி திரும்பியுள்ளது. அதே நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை அடுத்த குளத்தூர் காவல் நிலையம் மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடினர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய போராளிகள் மீது கடந்த 22 ஆம் தேதி போலிசார் நடத்திய கண்மூடித்தனமாக சுட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த கருங்குளத்தில் அரசுப் பேருந்து ஒன்றுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.இதில் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் 4 நாட்களுக்குப் பின் இன்று தூத்துக்குடியில் ஓரளவு இயல்பு நிலை திரும்பியது. இன்று 80 சதவீத பேருந்துகள் ஓடத் தொடங்கியுள்ளன. மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன,
காய்கறி மற்றும் பல சரக்கு கடைகள் இன்று காலை முதல் திறக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் தற்போது வெளியில் நடமாடத் தொடங்கியுள்ளனர். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை அடுத்த குளத்தூர் காவல் நிலையம் மீது இன்று அதிகாலை 4 மணிக்கு மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் யாருக்கும் காயமோ அல்லது காவல் நிலையத்துக்கு சேதமோ ஏற்படவில்லை. ஆனாலும் இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
