மீண்டும் சிக்கலில் டிவிஎஸ் நிறுவனம் !! வேலையில்லா நாட்களை அறிவித்தது !!
இரு சக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பாளரான டி.வி.எஸ் மோட்டார் குழும நிறுவனமான சுந்தரம் கிளேட்டன் மீண்டும் வேலையில்லா நாட்களை அறிவித்துள்ளது.
இந்தியாவில் அண்மைக்காலமாக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஜிடிபி பெருமளவு குறைந்தது. இதன் விளைவாக வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் பெரும் சரிவைச் சந்தித்து வருகின்றன.
விற்பனையில்லாமல் உற்பத்தி தேங்கும் நிலையில், வாகனத்தின் விலை குறைப்பும் நடந்து வருகிறது. இதுமட்டுமின்றி பல நிறுவனங்கள் வேலையில்லா நாட்களை அறிவித்து வருகிறது. அதன்படி வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக இருக்கும் சுந்தரம் – கிளேட்டன் தொடர்ந்து வேலையில்லா நாட்களை அறிவித்து வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வேலையில்லா நாட்களை அறிவித்தது. மீண்டும் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி வேலையில்லா நாட்களை அறிவித்தது. இந்நிலையில் இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை மீண்டும் வேலையில்லா நாட்களை அறிவித்துள்ளது.
இதுபோன்று தொடர்ந்து அறிவித்து வருவது சுந்தரம் கிளேட்டன் தொழிலாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சுந்தரம் கிளேட்டன் சென்னை மற்றும் ஓசூரில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.