75 வயசுக்கு மேல ஆனவங்க… வாரிசுகளுக்கு இனி கட்டாயமாக சீட் கிடையாது… பாஜக அதிரடி முடிவு !!
மகாராஷ்டிரா , அரியானா மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 75 வயது கடந்தவர்கள் மற்றும் வாரிசு அரசியலில் ஈடுபடுவோருக்கு சீட் வழங்கப்படமாட்டாது என பாஜக உறுதியாக கூறி உள்ளது.
70 வயதை கடந்தவர்களுக்கு எந்த ஒரு தேர்தலிலும் சீட் வழங்க கூடாது என்பது பாஜக வின் கட்சி கொள்கைளில் ஒன்றாக உள்ளது. இதில் மாநில அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடலாம் எனவும் கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அரியானா மாநிலத்தை பொறுத்தவரையில் 90 சட்டசபை இடங்கள் உள்ளன. இத் தேர்தலில் தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் பலர் தங்களின் வாரிசுகளை களம் இறக்க முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில பாஜக தலைவர் சுபாஷ் பராலா , மாநில தலைமையகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தில் வாரிசு அரசியலை ஊக்கு விக்க கூடாது என்பதை தெளிவு படுத்தி உள்ளனர்.
இதனையடுத்து 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தங்களின் வாரிசுகளுக்கும் சீட் வழங்கப்பட மாட்டாது. இது வரையில் யாரும் இந்த விதி முறையை மீறவில்லை. அதே நேரத்தில் வெற்றி பெற வாய்ப்பு உள்ள பெண் வேட்பாளர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் என அவர் கூறினார்.
விரைவில் வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியிடப்படும் எனவும் அந்த பட்டியலில் அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோரின் பெயர் இருக்கும் . மேலும் காங்கிரஸ், இந்திய லோக் தேசிய லோக் தள் கட்சியை போன்ற சாதி அரசியலை தவிர்த்து அனைத்து பிரிவுகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.