பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க முடியாது ! அடம் பிடிக்கும் ஆளுநர் !!
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்துவிட்டதாகவும், ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதவில்லை என்றும் கூறப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை முன் கூட்டியே விடுதலை செய்யும் வகையில் தமிழக அரசு சட்டப்பேரவையில் 2014-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் தெரிவித்திருந்தது. இதற்கிடையில், ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
2018- செப்டம்பரில் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய நிலையில், ஆளுநர் இதை தொடர்ந்து கிடப்பில் போட்டிருந்தார். அது குறித்து இதுவரை ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தமிழக ஆளுநர் மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனது முடிவை முதல்வர் பழனிசாமியிடம், அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறிவிட்டதாகவும் பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் அமைச்சரவையின் பரிந்துரை தொடர்பாக அரசுக்கு எழுத்துப்பூர்வமாக ஆளுநர் இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் தெரிய வருகிறது.