No purchase from midas ... tasmac orders are cancel

வருமான வரித்துறையின் அதிரடி சோதனையை அடுத்து சசிகலாவுக்கு சொந்தமான, 'மிடாஸ்' நிறுவனத்திடம் இருந்து, மது வகைகள் கொள்முதல் செய்வதை டாஸ்மாக் நிறுத்தியுள்ளது.

தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனம், 11 நிறுவனங்களிடம் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்படும் மது வகைகளையும், , அயல்நாட்டு மது வகைகளையும் வாங்குகிறது.

இதே போன்று ஏழு நிறுவனங்களிடம் இருந்து, பீர் வகைகளை கொள்முதல் செய்கிறது.

அதாவது சராசரியாக மாதம் ஒன்றுக்கு 48 லட்சம் பெட்டி மது வகைகளை, டாஸ்மாக் வாங்குகிறது. அதில், சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான, மிடாஸ் நிறுவனத்திடம் இருந்துதான் அதிக அளவில் மது வகைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.

ஆனால் ஜெயலலிதா மறைந்த பிறகு தினகரன் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இடையே தொடர்ந்து வரும் மோதல் போக்கு காரணமாக மிடாஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படும் மது வகைகளின் அளவை, அண்மையில் , டாஸ்மாக் குறைத்துக் கொண்டது..

இந்நிலையில், கடந்த 9 ஆம் தேதி மிடாஸ் மதுபான தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த வருமான வரித்துறை பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்நிறுவனத்தில் பொறுப்பாளர் ஷகிலா வருமான வரித்துறை விசாரணை வளையத்தில் உள்ளார்.

இந்த கடுமையான சூழ்நிலையில் நேற்று முதல், மிடாசிடம் இருந்து மது வகைகள் வாங்குவதை, டாஸ்மாக் நிறுவனம் நிறுத்தி உள்ளது.

வருமான வரித்துறையினர், மிடாஸ் ஆலையில் சோதனை நடத்தி, பல முறைகேடுகளை கண்டறிந்துள்ளதால் அங்கிருந்து மது வகைகள் வாங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வருமான வரித் துறை சோதனையில், டாஸ்மாக்கிற்கு சப்ளை செய்ததாக, மிடாஸ் தெரிவித்த மது வகைகளுக்கும், அதன் வங்கி கணக்குகளுக்கும், அதிக வேறு பாடு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அதனால் மிடாஸ் நிறுவனத்திடம் இருந்து, தற்போது மது பாட்டில்கள் வாங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

விசாரணை நடவடிக்கைகள் முடிவுக்கு வந்பின் மிடாசிடம் இருந்து, மது வகைகள் வாங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

.