மெரினாவில் போராட்டம் நடத்தக்கூடாது…. அந்தர் பல்டி அடித்த தம்பிதுரை!!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களைக் காரணம் காட்டி அதிமுக ஆட்சியை கலைக்க முடியாது என்றும் இதற்காக மெரினாவில் போராட்டம் நடத்தக்கூடாது எனவும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடையே பேசிய நாடாளுமன்ற துணை சபாநாயகர், காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் நாடாளுமன்றத்தை முடக்கி மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.
அ.தி.மு.க., ஜனநாயகத்தை நம்பும் கட்சி. காவிரி பிரச்சினை இன்றைக்கு வந்தது அல்ல. 1974–ம் ஆண்டில் இருந்தே இருக்கிறது. அப்போது ஆட்சியில் யார் இருந்தது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். தி.மு.க. நினைத்திருந்தால் காவிரி பிரச்சினையை தீர்த்து இருக்கலாம். ஆனால் தமிழகத்துக்கு தி.மு.க. வஞ்சனை செய்துவிட்டது என தமிபிதுரை குறிப்பிட்டார்..
தமிழகத்தில் அதிமுக நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை திசை திருப்ப திட்டமிட்டு தி.மு.க. மறியல் போராட்டம் நடத்துகிறது. இதை கண்டிக்கிறோம். எங்களது போராட்டம் காரணமாக சுப்ரீம் கோர்ட்டில் ஓரளவு தீர்ப்பு சாதகமாக வரும் நிலை உள்ளது. அப்படி வந்து விடக்கூடாது என்பதற்காக தி.மு.க.வினர் கீழ்த்தரமாக செயல்படுகிறார்கள் என கூறினார்..
போராட்டங்களை காரணம் காட்டி தமிழகத்தில் ஆட்சியை கலைக்க முடியாது. இது ஜெயலலிதா ஆட்சி. ஜெயலலிதாவின் ஆசி எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. எனவே, ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று தமிழகம் முழுவதும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது என்றும் அதனால்தான் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில் பொதுமக்களும், இளைஞர்களும் மெரினாவில்தான் போராட்டம் நடத்தவேண்டும் என்ற அவசியம் இல்லை, . சட்டம், ஒழுங்கு கெடும் வகையில் நடந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தம்பிதுரை தெரிவித்தார்..
அண்மையில் தமிழக இளைஞர்கள் மெரினாவில் லட்சக்கணக்கில் திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்திய போராட்டத்தைப் போன்று காவிரி பிரச்சனைக்கும் போராட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்திருந்த தம்பிதுரை தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளார்.