No power cut in tamilnadu Bloom box plan will be implemented
நமக்குத் தேவையான மின்சாரத்தை நாமே தயாரித்துக்கொள்ளும் தொழில்நுட்பமான ப்ளூம் பாக்ஸ் போன்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த தனது புதிய கட்சி முயற்சி செய்யும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் வரும் 21-ஆம் தேதி தனது சொந்த ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது கட்சியின் பெயரை அறிவித்து, அரசியல் சுற்றுப் பயணத்தைத் தொடங்கவுள்ளார். மேலும் அன்று மாலை மதுரையில் தனது முதல் அரசியல் பொதுக்கூட்டத்தை நடத்துகிறார். இதைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் கமல் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

இந்நிலையில் நடிகர் கமலஹாசன் ஆனந்த விகடன் வார இதழிலில் என்னுள் மையம் கொண்ட புயல் என்ற தொடரில் , உழவுக்கு வந்தனை செய்யும் படை என்ற தலைப்பில் கட்டுரை எழுதி உள்ளார். அதில், விவசாயத்தையும் விவசாயிகளையும் ஊக்கப்படுத்த வேண்டிய வேளாண்மைத் துறை நிவாரணங்களைக் கணக்கிட்டு ஆவணங்களில் மட்டுமே ஆட்சி செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மக்கள் இடம்பெயராமல் இருக்கக் கிராமப்புறக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய அரசு, பொதுக்கழிப்பிடம், சமுதாய நலக்கூடம், நூலகம், ரேஷன் கடை என்று டெண்டருக்காகவே கட்டடங்களைக் கட்டிக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அரசை விமர்சித்து கேள்வி மட்டும் கேட்காமல் கேள்விக்கு செயல்வடிவம் கொடுக்கவே, நமக்குத் தேவையான மின்சாரத்தை நாமே தயாரித்துக்கொள்ளும் தொழில்நுட்பமான ப்ளூம் பாக்ஸ் போன்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த முயற்சித்து வருவதாகவும் கமல்ஹாசன் சுட்டிக்காட்டி உள்ளார்.

விவசாயிகளுக்கு பெரும் பிரச்னையாக விளங்குவது சாதி தான் என்று குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், தேர்தல் பாதை ஆதாயத்திற்காக அரசியல்வாதிகள் சாதியை பாதுகாத்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
அரசு கட்டடங்கள் கரை பெயர்ந்து, அரசின் லட்சணங்களையும், அலட்சியங்களையும் ப் பறைசாற்றிக்கொண்டு நிற்பதாக கமல்ஹாசன் குற்றம்சாட்டினார்.
