மன பிராந்தியில் இருக்கிறார்கள்... - டிடிவி கிண்டல்...
துணை பொதுச்செயலாளரை அலுவலகத்திற்கு வரவிடாமல் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை எனவும், எடப்பாடி தரப்பினர் மன பிராந்தியில் இருக்கிறார்கள் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கட்சி நடவடிக்கைகளில் களமிறங்க இருப்பதாக அறிவித்துள்ள தினகரன், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கட்சியை பலப்படுத்த இருப்பதாக ஏற்கனவே டிடிவி தினகரன் அறிவித்திருந்தார்.
மேலும், அதிமுக அணிகள் இணைப்புக்காக 2 மாதம் அவகாசம் வழங்கியும் அதில் எள்ளளவும் முன்னேற்றம் இல்லாத நிலையில், தாம் களமிறங்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் டி.டி.வி.தினகரன் சசிகலாவை சந்தித்துப் பேசினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், துணை பொதுச்செயலாளரை அலுவலகத்திற்கு வரவிடாமல் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை எனவும், எடப்பாடி தரப்பினர் மன பிராந்தியில் இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
3 மாதமாக கட்சி செயல்படவில்லை எனவும், ஜெயக்குமார் பேச்சிற்கெல்லாம் பதில் சொல்ல மாட்டென் எனவும் தெரிவித்தார்.
கட்சி பணிக்காக அதிமுக தலைமை கழகம் நிச்சயம் செல்வேன் எனவும், எனக்கு அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
முதல்வரின் செயல்பாடு குறித்து ஒருவாரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுவேன் எனவும், அதுவரை காத்திருங்கள் எனவும் தெரிவித்தார்.