திமுகவிடம் இருந்து என்னை யாராலும் பிரிக்க முடியாது.. ஒரே அடியில் சிக்சர் அடித்த அனிதா ராதாகிருஷ்ணன்..!
தன் மீது விஷமப் பிரச்சாரத்தில் யாராவது ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தன் மீது விஷமப் பிரச்சாரத்தில் யாராவது ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் திமுக எம்எல்ஏவும், அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர்களில் ஒருவராகவும் இருப்பவர் கு.க.செல்வம். சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் உயிரிழந்ததையடுத்து மாவட்ட செயலாளர் பதவியை கைப்பற்ற போட்டி ஏற்பட்டது. ஆனாலும், யாரும் எதிர்பாராத விதமாக உதயநிதியின் ஆதரவால் திமுகவின் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக சிற்றரசு நியமிக்கப்பட்டார். இதனால், அதிருப்தி அடைந்த அவர் பாஜகவில் இணைந்துவிட்டார். இவரை தொடர்ந்து தூத்துக்குடி எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனும் பாஜகவில் இணைய உள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிடுள்ள அறிக்கையில்;- கடந்த சில நாட்களாக சில சமூக விரோதிகள் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் என்னை பற்றி அவதூறான செய்திகளை பரப்பி வருகின்றனர். நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் விசுவாசமிக்க தொண்டனாக, கழகத் தலைவர் தளபதி அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவதற்கு இதய சுத்தியோடு தீவிரமாக பணியாற்றி வருவதை கழகத் தலைவர் நன்கறிவார்.
ஆகையால் என்னை கழகத்திலிருந்தும், தலைவரிடமிருந்தும் எவராலும் பிரிக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன். இனியும் இது போன்று விஷமப் பிரச்சாரத்தில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அனிதா ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.