கடவுள் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை…. புது ரூட்டு போடும் எஸ்.வி.சேகர் !!
கடவுள் வாழ்த்துக்கு அனைத்துத் தருணங்களிலும் எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்றும், வைரமுத்து விவகாரத்தை திசை திருப்பவே விஜயேந்திரர் பிரச்சனையை பெரிதாக்குகிறார்கள் என்று நடிகர் எஸ்.வி.சேகர் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ் – சமஸ்கிருதம் அகராதி என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி விஜயேந்திரர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தார். அதே விழாவில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செய்தார்.
இதுகுறித்து, பல்வேறு தரப்பிலும், சமூக வலைத்தளங்களிலும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு, காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காததற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்தாய் வாழ்த்துக்கு மரியாதை கொடுக்காத விஜயேந்திரரை சட்டப்படி கைது செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள சங்கரமடம், தமிழ்த்தாய் வாழ்த்தும் கடவுள் வாழ்த்து என்பதால் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் தியானத்தில் இருந்ததாகவும், தேசிய கீதம் பாடுவது நாட்டுக்கு மரியாதை செலுத்தப்படுவது என்பதால் அப்போது அவர் எழுந்து நின்றதாகவும் காஞ்சி சங்கரமடம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சனை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள நடிகர் எஸ்.வி.சேகர், கடவுள் வாழ்த்து பாடல்களுக்கு அனைத்துத் தருணங்களிலும் எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.
ஒரு மடத்தின் பீடாதிபதிகள் எவ்வாறு மரியாதை செய்வார்களோ அந்த முறையில் தான் மரியாதை செய்ததாக எஸ்.வி.சேகர் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் வைரமுத்து விவகாரத்தை திசை திருப்பவே இதை பெரிதாக்குகின்றனர் என்றும் எஸ் வி சேகர் குற்றம்சாட்டியுள்ளார்.
எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ள கருத்தில், தமிழ்தாய் வாழ்த்து என்பதை தங்களுக்கு சாதகமாக கடவுள் வாழ்த்து என மாற்றிக் கொண்டுள்ளார்.