No more investigation in DSP Vishnupriya death says CBI to the court

தர்மபுரி இளவரசன் மர்ம மரணத்துக்குப் பின் தமிழகத்தை ‘ஆணவ கொலைகள்’ எனும் வார்த்தை புரட்டி எடுத்து புடம் போட்டது. இளவரசனை தொடர்ந்து கோகுல்ராஜின் மர்ம மரணமும் பெரிதாய் பேசப்பட்டது. 

இந்நிலையில் அந்த வழக்கின் முக்கிய விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா திடீரென தற்கொலை செய்து கொண்டார். துவக்கத்தில் ‘துப்பறியும் மற்றும் நுண்ணறியும் அவசியமுடைய இந்த டி.எஸ்.பி. பதவியானது தனது கேரக்டருக்கு செட் ஆகவில்லை என்று வி.பிரியா வருந்தினார். அந்த மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.’ என்று முதலில் தகவல் பரவியது. பிறகோ ‘மேலதிகாரியின் டார்ச்சர்’ என்றார்கள், அதன் பிறகோ ‘இது தற்கொலையில்லை, தற்கொலை தூண்டல்! கொலை மிரட்டலின் வெளிப்பாடு. இதன் பின் பல மர்மங்கள் புதைந்து கிடக்கிறது!’ என்றெல்லாம் போட்டுப் பொளந்தார்கள். 

இதன் விளைவாக விஷ்ணுபிரியா மரணத்தில் உண்மை காரணத்தை கண்டறிய மற்ற விசாரணை அமைப்புகளிடமிருந்து வாங்கி, சி.பி.ஐ.யின் வசம் ஒப்படைக்கப்பட்டது. சி.பி.ஐ.யும் விசாரித்து வந்தது. 

இந்நிலையில், இன்று கோவை கோர்ட் விஷ்ணு பிரியாவின் தந்தைக்கு இன்று சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் வரும் 9-ம் தேதி நேரில் கோர்ட்டில் ஆஜராகிட உத்தரவிட்டுள்ளது. 

காரணம்?... விஷ்ணு பிரியாவின் தற்கொலை வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. இந்த வழக்கில் கொலைக்கான முகாந்திரம் இல்லாததால் விலகுவதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாம். இதன் விளைவாகவே விஷ்ணு பிரியாவின் தந்தை தனது தரப்பு கருத்துக்கள் ஏதாவது இருந்தால் 9-ம் தேதியன்று தெரிவிக்கலாம் என்று சொல்லியுள்ளது. 

இந்நிலையில், சி.பி.ஐ. ‘அந்தம்மா விஷ்ணுபிரியாவின் மரணத்தில் கொலைக்கான பின்னணிகள் எதுவுமில்லை. நாங்க விலகிக்குறோம்!’ என்று சொன்னதை சில அமைப்புகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ’சி.பி.ஐ.யின் இந்த திடீர் முடிவானது ஒரு பின்வாங்கலே. நிச்சயம் இதன் பின்னணியில் அரசியல் மற்றும் அதிகார மைய காரணம் இருக்கிறது. அதை விரைவில் கண்டுபிடித்து வெளியிடுவதோடு, விஷ்ணு பிரியாவின் வழக்கை வலுவான விசாரணை அமைப்பின் மூலம் மீண்டும் தூசி தட்டிட வலியுறுத்துவோம்.’ என்று உறுமியுள்ளனர். 

சி.பி.ஐ.க்கும் மேலேன்னா இண்டர்போல் போலீஸ்ட்டயா கொடுக்க முடியும்? என்றும் ஒரு கேள்வி எழுந்துள்ளது ஆரோக்கியமானதில்லை.