திருமணத்தை பதிவு செய்ய இனி அலைச்சல் தேவை இல்லை. வீட்டுக்கு அருகிலேயே வசதி. அரசு அதிரடி.
திருமணம் நடைபெற்ற இடத்தில் உள்ள சார் பதிவாகம் மற்றும் மணமக்கள் இருவரின் நிரந்தர வசிப்பிடம் அமைந்துள்ள சார்பதிவகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் திருமண பதிவினை மேற்கொள்ளலாம்.
மண மக்களின் வசிப்பிடத்திற்கு அருகிலேயே இனி திருமணத்தை பதிவு செய்து கொள்ள முடியும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு திருமணங்கள் பதிவு சட்டம் 2009 பிரிவு (5)1-ன் படி தமிழ்நாடு மாநிலத்தில் திருமணம் நடைபெறும் இடத்தின் எல்லைக்குட்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே திருமணம் பதிவு செய்ய இயலும் என்ற நிலை இருந்தது.
இதனை எளிமைப்படுத்தும் நோக்குடன் 2020 -2021 ஆம் ஆண்டு அமைச்சர் கே.சி வீரமணி தாக்கல் செய்த பதிவுத் துறை மானியக் கோரிக்கையில், மணமகன் மற்றும் மணமகள் இருப்பிடம் அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகங்களிலும் திருமணத்தை பதிவு செய்யும் புதிய வசதியை ஏற்படுத்தும் விதமாக, தமிழ்நாடு திருமணங்கள் பதிவு சட்டம் 2009 இல் திருத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு திருமணங்கள் பதிவு சட்டம் 2009 பிரிவு (5) 1-ன் படி கீழ்க்கண்ட சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாடு திருமணங்கள் பதிவு சட்டம் 2009 இன் படி அனைத்து தரப்பினருக்கான திருமணங்களும் கட்டாய பதிவு செய்யப்பட வேண்டும் என்பதனை அனைவரும் பின்பற்றும் விதமாக திருமணம் நடைபெற்ற இடத்தில் உள்ள சார் பதிவாகம் மற்றும் மணமக்கள் இருவரின் நிரந்தர வசிப்பிடம் அமைந்துள்ள சார்பதிவகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் திருமண பதிவினை மேற்கொள்ளலாம். எனவே மேற்குறிப்பிட்ட வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.