வீடும் இல்லை... காரும் இல்லைங்க... போலீஸார் அபாண்ட பழி போடுறாங்க... கதறும் பப்ஜி மதனின் மனைவி..!
போலீஸ் பறிமுதல் செய்த மற்றொரு ஆடி கார் எங்களுடையது அல்ல. யாருடையது என அவர்கள் தெரிவிக்க வேண்டும்.
யூடியூபர் பப்ஜி மதன் மீது முகாந்திரம் ஏதும் இல்லாமல் அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது மனைவி கிருத்திகா குற்றம் சாட்டியுள்ளார்.
பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா, சென்னை, வேப்பேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ’’கடந்த 10 ஆண்டுகளாக மதன் எந்த சொத்துகளையும் வாங்கவில்லை. மதனுடன் ஆபாசமாக பேசும் பெண் குரல் என்னுடைய குரல் இல்லை. யூடியூபில் பப்ஜி விளையாட்டில் பேசியது என் குரல் தான் என பரவிய தகவல் தவறானது. யூடியூப் சேனலுக்கு நான் அட்மின் இல்லை. அதற்கான வங்கிக் கணக்கு மட்டுமே என் பெயரில் உள்ளது.
மதன் வீடுகள் கார்கள் போன்ற சொத்துக்களை வாங்கிக் குவிக்கவில்லை. நாங்கள் சொந்த வீட்டில் வசிக்கவில்லை. எங்களிடம் 2 சொகுசு கார்கள் இல்லை. ஆடி ஏ6 கார் மட்டுமே உள்ளது. அவர் வைத்திருந்த ஆடி காரும் மதன் பெயரில் இல்லை. போலீஸ் பறிமுதல் செய்த மற்றொரு ஆடி கார் எங்களுடையது அல்ல. யாருடையது என அவர்கள் தெரிவிக்க வேண்டும்.
எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யூடியூப் சேனலில் 20 மணி நேரம் வேலை பார்த்து எனது கணவர் சம்பாதித்துள்ளார். என்னுடைய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. வீடு சாவிகள் போலீசாரிடம் உள்ளது’’என்று அவர் தெரிவித்தார்.