ஹிந்தியை திணிக்க விட மாட்டோம் !! அமித்ஷாவை அதிர வைத்த எடியூரப்பா !!
கன்னட மொழியும் கன்னட கலாச்சாரமும் தான் எங்களுக்கு முக்கியம் என்றும் கன்னட மொழிக்கு தரப்படும் முக்கியத்துவத்தில் ஒருபோதும் சமரசம் கிடையாது என்றும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான அமித்ஷா தனது டுவிட்டரில் , இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம்.
தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன்' என்று தெரிவித்து இருந்தார்.
இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் என பல மாநிலங்களில் எதிர்கட்சித் தலைவர்கள் ஹிந்தி திணிப்பு கூடாது என போராடி வருகின்றனர்.
இந்நிலையில், கன்னடமே எங்களுக்கு பிரதான மொழி என்று கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் பக்கத்தில், கர்நாடகத்தில் கன்னட மொழியே முதன்மையானது, அனைத்து அதிகாரப்பூர்வ மொழிகளும் நாட்டில் சமமானவையே என குறிப்பிட்டுள்ளார்.
கன்னட மொழிக்கு தரப்படும் முக்கியத்துவத்தில் ஒருபோதும் சமரசம் கிடையாது. கன்னட மொழி, கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார். கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் எடியூரப்பாவின் இந்த பதிவு பாஜகவினரிடையே அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.