மத்தியில் பா.ஜ.க. அரசு தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் சரிவிலிருந்து பொருளாதாரத்தை மீட்க முடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். 

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் பெயில் பெற்று வெளியே உள்ள ப.சிதம்பரம் நேற்று டெல்லியிலிருந்து சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்போது அவர் கூறியதாவது: அவர்கள் (பா.ஜ.க. அரசு) பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளி விட்டார்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு 8 சதவீதத்திலிருந்து 4.5 சதவீதமாக குறைந்துள்ளது.

நாட்டின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் பொருளாதார வளர்ச்சி 3.5 சதவீதம்தான் என தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் அந்தரத்தை நோக்கி செல்கிறது. பா.ஜ.க. ஆட்சி இருக்கும் வரை பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்க முடியாது என தெரிவித்தார். 

விமான நிலையத்தில் காங்கிரஸ் தொண்டர்களும், அவரது ஆதரவாளர்களும் சென்னை வந்த ப.சிதம்பரத்துக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
மத்திய அரசுக்கு பொருளாதாரம் குறித்த தெளிவில்லை. பொருளாதாரம் குறித்து பிரதமர் மோடி வழக்கத்துக்கு மாறாக அமைதியாக உள்ளார். 

பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியில், குறைந்த வளர்ச்சி நிலை, பின்தங்கிய மற்றும் தனிநபர் சுதந்திரத்தை அடக்குவதன் மூலம் வலதுசாரி பாசிசத்தை நோக்கி நாடு தள்ளப்படுகிறது என ப.சிதம்பரம் சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.