No congress no BJP chandra sekara rao will meet staline today

பாஜக மற்றும் காங்கிஸ் கட்சிக்கு எதிராக மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, தெலங்கானா கட்சித் தலைவர் சந்திர சேகர ராவ் ஆகியோர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக சந்திரசேகர ராவ் இன்று திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.

தெலுங்கானா முதலமைச்சரும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அல்லாத கூட்டாட்சி முன்னணிஎன்னும் 3-வது அணியை தேசிய அளவில் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இது தொடர்பாக அவர் ஏற்கனவே, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மதசார்பற்ற ஜனதா தளம் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவே கவுடா ஆகியோரை சந்தித்து பேசி ஆதரவு திரட்டினார்.

இந்நிலையில் தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக திகழும் தி.மு.க.வின் ஆதரவை பெறுவதற்காக ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் இன்று சந்திர சேகர ராவ் சென்னை வருகிறார்.

அவர் முதலில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரிக்கிறார். பின்னர் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 3-வது அணிக்கு ஆதரவு கேட்பது தொடர்பாக சந்திரசேகர ராவ் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அவர் இன்றிரவு சென்னையில் தங்குகிறார்.

நாளை மதியம் வரை சென்னையில் தங்கியிருக்கும் சந்திரசேகர ராவ் மேலும் பல தமிழக கட்சிகளின் தலைவர்களை சந்தித்து 3-வது அணி முயற்சிக்கு ஆதரவு திரட்டுகிறார்.

இதற்கிடையே 3-வது அணி தொடர்பாக உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ் யாதவை மே மாத தொடக்கத்தில் ஐதராபாத்தில் சந்திரசேகர ராவை சந்தித்து பேச திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.