பா.ஜ.க.வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார்.
உத்தரபிரதேசம், கோவா, பஞ்சாப் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவா மாநிலம், வாஸ்கோவில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடந்தது. அதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
மகாராஷ்டிராவில், பா.ஜ.க. - சிவசேனா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.கவுக்கு, தேசியவாத காங்கிரஸ் ஆதரவளிக்கும் என தவறான தகவலை பரப்பி வருகின்றனர். இதுபோன்ற பொய்யான தகவலை பா.ஜ.க.வினர் திட்டமிட்டே கூறி வருகின்றனர்.
மதச்சார்பற்ற கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதை யாரும் மாற்ற முடியாது. பா.ஜ.க.வுடன், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
