எஸ்.விசேகர் சார் நீங்க உள்ள போய்தான் ஆகணும்….கைது செய்ய காவல் துறையினருக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!!
பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் முன் ஜாமீன் கேட்ட நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்ய காவல் துறையினருக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது ஒரு பெண் நிருபர் கேள்வி கேட்டபோது, அவரது கன்னத்தை தொட்டு பேசினார். கவர்னரின் இந்த செயல் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து அந்த பெண் நிருபரிடம், தன் செயலுக்காக கவர்னர் மன்னிப்பு கேட்டார்.
இந்த நிலையில், இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பா.ஜ.க., பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர், சமூக வலை தளத்தில் பெண் செய்தியாளர்களுக்கு எதிராக அவதூறான, கீழ்தரமான கருத்துக்களை பதிவிட்டார். எஸ்.வி.சேகரின் செயலுக்கு, பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாமல், பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். அவருக்கு எதிராக போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து, எஸ்.வி. சேகரும் மன்னிப்பு கோரினார். தனக்கு வந்த ஒரு பதிவை படித்துப் பார்க்காமல் அப்படியே தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு விட்டதாக விளக்கம் அளித்தார். இந்த நிலையில், எஸ்.வி.சேகருக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில், எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், எஸ்.வி. சேகர் முன் ஜாமீன் மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முன்ஜாமீன் மனு கோடைக்கால முதல் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி கூறினார்.
இதையடுத்து இந்த முன்ஜாமின் வழக்கு விசாரணைக்கு வரும் வரை எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதிக்குமாறு அவரது வழக்கறிஞர் வாதாடினார். ஆனால் கைது செய்ய வழக்கமாக காவல்துறையினருக்கு தடை விதிப்பதில்லை என நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து எஸ்.வி.சேகர் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.