தற்போது மத்திய  நிதி அமைச்சராக உள்ள நிர்மலா சீத்தாராமனின் செயல்பாடுகளில் பிரதமர் மோடிக்கு திருப்தி இல்லை என்றும் அதனால்  அவரிடம் உள்ள நிதித்துறையை பியூஷ் கோயலிடம் மாற்றிவிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டது. நாட்டின் நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி உடல்நலம் குன்றியதால் அவர் அமைச்சர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார்.

இதையடுத்து யார்? நிதி அமைச்சராகப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தபோது கடந்த ஆட்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீத்தாராமனுக்கு அடித்தது யோகம். அவர் தான் நிதி அமைச்சராக்கப்பட்டார்

ஒரு சில அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றி அமைக்க பிரதமர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் முதல் கட்டமாக நிர்மலா சீத்தாராமனிடம் இருக்கும் நிதித்துறையை பியூஷ் கோயலிடம் மாற்றிக் கொடுக்க முடிவு செய்துள்ளார்.

நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் பொருளாதார ரீதியாக நாடு ஒரு பின்னடைவை சந்தித்துள்ளதாக பிரதமர் உணர்வதாக தெரிகிறது. கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு 5. 8 சதவீத அளவுக்கு பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது.

நிதி அயோக் அதிகாரிகளும் நிர்மலா சீத்தாராமன் மீது பிரதமரிடம் தொடர்ந்து புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பங்குச் சந்தையில் சரிவு, விலைவாசி உயர்வு போன்றவையும் பிரதமருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நிர்மலா சீத்தாராமன் மாற்றப்படுவார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதற்குப் பதிலாக வேறு ஒரு இலாகாவை நிர்மலா சீத்தாராமனுக்கு கொடுக்கவும் கூடுதலாக தமிழகத்தில் பாஜகவை வளர்க்கும் பொறுப்பும் கொடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.