டபுள் கேம் ஆடி ஒ.பி.எஸ்ஸிடம் இணைந்த நிர்மலா பெரியசாமி - இங்கேயாவது போனி ஆவாரா?
அரசியலில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்து கொள்ள படாதபாடு படும் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் நிர்மலா பெரியசாமி, தற்போது ஒ.பி.எஸ் அணியில் இணைந்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா அணி, ஒ.பி.எஸ் அணி என அதிமுக இரண்டாக பிரிந்தது. பின்னர், சசிகலா தரப்பு ஆதரவாளர்கள் பெரும்பாலானோர் ஒ.பி.எஸ் பக்கம் வரத்தொடங்கினர்.
இதைதொடர்ந்து சசிகலா தரப்பில் இருந்த நட்சத்திர பேச்சாளர்களின் கூட்டமும் கரைய தொடங்கியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு சி.ஆர்.சரஸ்வதியின் கூடவே இருந்த அதிமுக நட்சத்திர பேச்சாளரான பாத்திமா பாபு ஒ.பி.எஸ்ஸிடம் தஞ்சம் அடைந்து வலுவாக பிடித்து கொண்டார்.
அதை தொடர்ந்து தற்போது நிர்மலா பெரியசாமியும் ஒ.பி.எஸ்ஸுடன் இணைந்துள்ளார்.
சசிகலா தரப்பு நட்சத்திர பேச்சாளர்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் நிர்மலா பெரியசாமி பன்னீர்செல்வத்தை புகழ்ந்து பேசியுள்ளார்.
அதற்கு சசிகலாவின் விசுவாசிகளான வளர்மதியும், சி.ஆர் சரஸ்வதியும் கடுமையாக திட்டியுள்ளனர். மேலும் அங்கிருந்து வெளியேறுமாறும் வற்புறுத்தியுள்ளனர். இதனால் நிர்மலா பெரியசாமி அங்கிருந்து வெளியேறினார்.
இதையடுத்து இன்று மாலை ஒ.பி.எஸ் அணியில் இணைந்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
இனிமேல் எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் மக்களை சந்திக்க முடியும்.
உண்மையாக துரோகி யார் என்பது ஆர்.கே.நகர் தேர்தலில் தெரிய வரும்.
விசுவாசத்திற்கு உண்மையாக இருப்பவர்களின் பக்கம் இணைந்துள்ளேன்.
குண்டுக்கல்யாணம் உள்ளிட்டோர் கட்சியை விட்டு செல்லுங்கள்.
ஜெயலலிதா மரணத்தில் தொண்டர்களுக்கு சந்தேகம் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தற்போது ஒ.பி.எஸ்ஸிடம் நிர்மலா தஞ்சம் அடைந்ததற்கு அவர் சொல்லும் காரணம்தான் சற்று வேடிக்கையாக உள்ளது.
ஒ.பி.எஸ்ஸிடம் தஞ்சம் அடைவதற்காகவே வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு விதண்டாவாத காரியத்தை நிகழ்த்தி ஒ.பி.எஸ்ஸிடம் இணைந்ததாக தெரிகிறது.
2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இருந்தே அரசியலில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்று நிர்மலா பெரியசாமி பெரும் பாடுபட்டு வருகிறார்.
போகிற இடத்திலெல்லாம் அவருக்கு அவமரியாதையே மிஞ்சியது. கிட்டத்தட்ட 13 வருடங்களாக போராட்டத்தையே வாழ்க்கையாக்கி கொண்ட நிர்மலா தற்போது அதிமுகவின் பிளவில் ஆதாயம் தேட பார்க்கிறார் என்றே சொல்லலாம்.
காரணம், பிடிக்காதவர் வீட்டுக்கு சென்று பிடிக்காதவரை பற்றி பேசுவது அநாகரிகம் என்று அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் நிர்மலா பெரியசாமி வேண்டுமென்றே சசிகலா தரப்பு கூட்டத்திற்கு சென்று ஒ.பி.எஸ் பற்றி புகழ்த்து ஏன் பேச வேண்டும்.
இதிலிருந்தே தெரிகிறது அங்கு ஒரு நாடகத்தை நடத்தி ஒ.பி.எஸ்ஸின் ஆதரவை பெற வேண்டும் என்று டபுள் கேம் ஆடியுள்ளார் நிர்மலா பெரியசாமி.
அதன்படி தற்போது ஒ.பி.எஸ் அணியில் இணைந்தும் விட்டார். இங்கேயாவது போனி ஆவாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.