"வளர்மதி, சரஸ்வதி எல்லாம் அரசியல்வாதிகள் இல்ல... அரசியல் வியாதிகள்" - போட்டுத்தாக்கும் நிர்மலா
வளர்மதியும் சி.ஆர்.சரஸ்வதியும் அரசியல்வாதிகள் இல்லை, அரசியல் வியாதிகள் என சசிகலா தரப்புக்கு எதிராக நிர்மலா பெரியசாமி போர்க்கொடி தூக்கியுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா அணி ஒ.பி.எஸ் அணி என அதிமுக இரண்டாக பிரிந்தது. பின்னர், சசிகலா தரப்பு ஆதரவாளர்கள் பெரும்பாலானோர் ஒ.பி.எஸ் பக்கம் வரத்தொடங்கினர்.
இதைதொடர்ந்து சசிகலா தரப்பில் இருந்த நட்சத்திர பேச்சாளர்களின் கூட்டமும் கரைய தொடங்கியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு சி.ஆர்.சரஸ்வதியின் கூடவே இருந்த அதிமுக நட்சத்திர பேச்சாளரான பாத்திமா பாபு ஒ.பி.எஸ்ஸிடம் தஞ்சம் அடைந்தார்.
தற்போது நட்சத்திர பேச்சாளரான நிர்மலா பெரியசாமி சசிகலா தரப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். ஒ.பி.எஸ் பக்கம் இணைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சசிகலா தரப்பு நட்சத்திர பேச்சாளர்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் நிர்மலா பெரியசாமி பன்னீர்செல்வத்தை புகழ்ந்து பேசியுள்ளார்.
அதற்கு சசிகலாவின் விசுவாசிகளான வளர்மதியும், சி.ஆர் சரஸ்வதியும் கடுமையாக திட்டியுள்ளனர். மேலும் அங்கிருந்து வெளியேறுமாறும் வற்புறுத்தியுள்ளனர். இதனால் நிர்மலா பெரியசாமி அங்கிருந்து வெளியேறினார்.
இதையடுத்து வளர்மதியையும், சி.ஆர்.சரஸ்வதியையும் கடுமையாக விமர்சித்துள்ளார் பெரியசாமி.
அவர் கூறியதாவது :
நான் எப்படியும் இரு அணிகளும் ஒன்றுபட்டுவிடும் என்று காத்திருந்தேன்.
அம்மாவின் கட்சியை விட்டு வெளியே போகவிருப்பப்படவில்லை என்பதால் யோசித்துக்கொண்டிருந்தேன்.
ஓ.பி.எஸ் அண்ணன் நமக்கு எதிரியா என நான் கேட்டதை மட்டும் எடுத்துக்கொண்டு, அவர்கள் என்னை விமர்சனம் செய்தனர்.
ஓ.பி.எஸ் எதிரி இல்லை என்றால், நீங்கள் ஏன் கட்சியில் இருக்க வேண்டும் என்று என்னை கேட்டார் வளர்மதி.
நீங்கள் யார் என்னைகட்சியை விட்டு வெளியேற சொல்ல என நான் கேட்டேன். அதற்கு வளர்மதி என்னை அடக்க பார்த்தார்.
சொந்த தொகுதியில் மக்களால் விரட்டப்பட்ட வளர்மதி என்னை அடக்க முயல என்ன தகுதியுள்ளது?
சி.ஆர்.சரஸ்வதி, வளர்மதி ஆகியோர் அரசியல்வாதிகள் இல்லை, அரசியல் வியாதி போன்றவர்கள்.
பதவி, கவுரவம் என அனைத்து சலுகைகள் கிடைத்தாலும் கூட அதிமுகவிலுள்ள பலரும் மன புழுக்கத்தில்தான் உள்ளனர்.
விரைவில் ஒவ்வொருவராக பன்னீர்செல்வம் அணியில் இணைவார்கள். நான் எனது முடிவில் உறுதியாக உள்ளேன்.
இவ்வாறு பேசியுள்ளார்.