நிர்மலா தேவி வழக்கில் அடுத்தடுத்த திருப்பம்…..பேராசிரியை மீது மேலும் 2 மாணவிகள் புகார் !!
கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மீது அதிரடி திருப்பமாக மேலும் 2 மாணவிகள் புகார் கூறியுள்ளனர்.
தவறான பாதைக்கு அழைத்ததாக கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மீது கல்லூரி மாணவிகள் புகார் கூறியிருந்தனர். இது தொடர்பாக அவரை சிபிசிஐடி போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் குழு அமைத்து கவர்னர் உத்தரவிட்டிருந்தார். இந்த குழு பலரிடம் விசாரணை நடத்தியிருந்தது. இந்நிலையில், இந்த குழுவின் 2ம் கட்ட விசாரணை துவங்கியது. மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் விசாரணை நடைபெற்றது.
இதனிடையே, நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள், குழுவிடம் புகார் அளித்துள்ளனர். தேவாங்கர் கல்லூரியில் படிக்கும் முதல் மற்றும் 2ம் ஆண்டு மாணவிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மாணவிகள் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதால், சிறார் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என மாணவிகள் சார்பில் மனு அளித்த அருப்புக்கோட்டையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் கூறியுள்ளார்.
தொடர்ந்து அடுத்தடுத்து பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் புகார்கள் குவிந்து வருவதால் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது.