கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, பரவல் வேகம், மருத்துவமனை உள்கட்டமைப்பு மற்றும் அதன் பயன்பாடு, போதுமான சுகாதார பணியாளர்கள், கட்டுப்பாட்டு மண்டலங்களை அறிவித்தல் போன்றவை தொடர்பான தகவல்களை மாவட்ட அளவில் இருந்து தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். 

ஒமிக்ரான் வைரஸ் டெல்டா வகையை விட மூன்று மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது. அதன் பரவலை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கொரோனா முதல் அலையை விட 2வது அலை கோரத்தாண்டவம் ஆடியது. இதில், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகள் எடுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கையின் காரணமாக பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வகை வைரஸ் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்து உள்ளது. இதுவரை 90 நாடுகளில் பரவியிருக்கும் ஒமிக்ரான் வகை, டெல்டாவை விட மிகத் தீவிரமானது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

கடந்த 2ம் தேதி இந்தியாவில் முதல் முறையாக கர்நாடகாவில் ஒமிக்ரான் வகை தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 19 நாளில் தொற்று எண்ணிக்கை 200ஐ தாண்டி உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 215ஆக அதிகரித்துள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் மாநில அரசுகள் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதுதொடர்பாக, மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எழுதிய கடிதத்தில்;- கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, பரவல் வேகம், மருத்துவமனை உள்கட்டமைப்பு மற்றும் அதன் பயன்பாடு, போதுமான சுகாதார பணியாளர்கள், கட்டுப்பாட்டு மண்டலங்களை அறிவித்தல் போன்றவை தொடர்பான தகவல்களை மாவட்ட அளவில் இருந்து தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். அவசர செயல்பாட்டு மையங்கள், தயார் நிலையில் சிறப்பு சிகிச்சை மையங்களை அமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போதுள்ள வழிகாட்டுதல்களின்படி, தேவையான இடங்களில் இரவு ஊரடங்கு, கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்துதல், திருமணம் மற்றும் இறுதி சடங்குகளில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்த்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மேலும் தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும். 2வது டோஸ் செலுத்திக் கொள்ளாதவர்களை கண்டறிந்து, முழுமையான தடுப்பூசி செலுத்துதலை உறுதிப்படுத்த வேண்டும். முககவசம் அணிதல், கூட்டமாக செல்வதை தவிர்த்தல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் உள்ளிட்ட தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை, மக்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.