என்னோட அடுத்த டார்கெட் இரட்டை இலைதான் - குக்கர் சின்னம் கிடைத்த சந்தோஷத்தில் டிடிவி தினகரன்...
மதுரை
குக்கர் சின்னம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்த டி.டி.வி. தினகரன் அடுத்து இரட்டை இலையை மீட்பேன் என்று கூறினார்.
மதுரை மாவட்டத்தில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அந்தப் பேட்டியில், "டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
ஆர்.கே.நகரில் நான் சுயேச்சையாக நின்று ஜெயித்த குக்கர் சின்னத்தையும், நாங்கள் கேட்கும் அ.தி.மு.க. அம்மா என்ற கட்சியின் பெயரையும் வழங்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும், மூன்று வாரத்திற்குள் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, இனிமேல் இரட்டை இலை வழக்கை நான் தொடர்ந்து நடத்தலாம்.
இதன்மூலம் நீதிமன்றம் மற்றும் மக்கள் மன்றத்தில் வெற்றிப் பெற்று இரட்டை இலையை மீட்டு எடுப்போம். கட்சியின் பெயர், கொடி குறித்து எல்லோரிடமும் கலந்துபேசி முடிவு எடுப்பேன்.
எனவே, எனது அடுத்த அனைத்து நிகழ்ச்சிகளையும் இரத்து செய்துவிட்டு சென்னைக்கு புறப்படுகிறேன். சென்னையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளேன்.
அறிஞர் அண்ணா, ஜெயலலிதா போன்று எல்லோரிடமும் பேசித்தான் முடிவு எடுப்பேன்" என்று அவர் தெரிவித்தார்.