தமிழக பாஜ தலைவர் பதவியை பிடிப்பதில் பாஜக மூத்த தலைவர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆனாலும், இதற்கான போட்டியில் நயினார் நாகேந்திரன் அல்லது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை  ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக பாஜகவின் அடுத்த தலைவராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியும், இளம் நிர்வாகியான அண்ணாமலை நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழக பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன், 2019-ம் ஆண்டில் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, கடும் போட்டிகளுக்கு இடையே யாரும் எதிர்பாராத வகையில் எல்.முருகன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலை எதிர்கொண்டது. அதிமுகவிடம் 20 தொகுதிகள் வாங்கி பாஜக போட்டியிட்டது. அதில், 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், பிரதமர் மோடி 2வது முறையாக கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று 2வது முறையாக பிரதமராகப் பதவியேற்றார் மோடி. அதிலிருந்து அமைச்சரவையில் எந்த மாற்றமும் இல்லை. அதே அமைச்சர்கள் தான் இப்போது வரை பதவியில் நீடிக்கிறார்கள். சொல்லப் போனால் ஏராளமான அமைச்சர் பதவிகள் காலியாக உள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தின்படி மொத்தமாக 81 பேர் அமைச்சராகலாம். ஆனால் மோடி அமைச்சரவையில் 53 பேர் மட்டுமே உள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாகவே அமைச்சரவையில் மாற்றம் தள்ளிப் போவதாகக் கூறப்பட்டது. தற்போது கொரோனா வெகுவாகக் குறைந்துவிட்டதால் கடந்த இரு மாதங்களாகவே இதுதொடர்பாக ஆட்சித் தலைமையும், கட்சித் தலைமையும் ஆலோசனை நடத்தியது. அதன்படி பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த தகவல் வெளியானதும் தமிழகத்திலிருந்து ஒருவர் கூட ஒன்றிய அமைச்சராகாத நிலையில், அதற்கு கடும் போட்டி ஏற்பட்டது.

தனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தே ஆக வேண்டும் என்று ஒரு முடிவோடு டெல்லியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மூத்த தலைவர்களை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. அதேநேரம், கூட்டணி கட்சியான அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தும், ராஜ்யசபா எம்பியான தம்பிதுரையும் ஒன்றிய அமைச்சர் பதவி கேட்டு பாஜ மேலிடத்தில் காய் நகர்த்தி வந்தனர். இதனால் இந்த முறை இவர்களில் யாராவது ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் விரிவாக்கம் செய்யப்பட்ட ஒன்றிய அமைச்சர்கள் பட்டியல் நேற்று மதியம் வெளியானது.

அதில் இடம் பிடித்தவர்கள் நேற்று மாலையே பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த பட்டியலில் தமிழகத்தில் இருந்து தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வரும் எல்.முருகன் இடம் பிடித்தார். ஒன்றிய இணை அமைச்சராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதனால் தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக உள்ளது. பாஜக விதிகளின் படி அமைச்சர் பதவியில் இருக்கும் ஒருவர் தலைவர் பதவியில் இருக்க முடியாது. எனவே, தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கான தகவலையும் பாஜக மூத்த தலைவர்கள் நேற்று வெளியிட்டனர்.

இதனால் தமிழக பாஜ தலைவர் பதவியை பிடிப்பதில் பாஜக மூத்த தலைவர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆனாலும், இதற்கான போட்டியில் நயினார் நாகேந்திரன் அல்லது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியும், இளம் நிர்வாகியான அண்ணாமலை நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.