ஒரு கோடி மரக்கன்றுகள் நடத்திட்டம் !! இபிஎஸ், ஓபிஎஸ்ஸின் புது டி.வி. நிர்வாகம் முடிவு ….. குவியும் பாராட்டு !!
அதிமுக சார்பில் நேற்று புதிதாக தொடங்கப்பட்ட நியூஸ் ஜெ, தொலைக்காட்சி நிர்வாகம் தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளது. இதன் முதற் கட்டமாக வரும் மழைக் காலத்துக்குள் 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என நியூஸ் ஜெ நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக ஜெயா டிவி இருந்து வந்தது.. ஆனால் அக்கட்சி உடைந்த பிறகு ஜெயா டிவி சசிகலா கைவசம் சென்றுவிட்டது. இதையடுத்து ஜெயா டிவிக்கு க்கு போட்டியாக தற்போது இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான 'நியூஸ் ஜெ' தொலைக்காட்சி சேனல் தொடங்கப்பட்டது.
இதற்கான லோகோவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.
இந்நிலையில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி செய்திகள், பொழுதுபோக்கு என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் பல சமூக சேவைகளிலும் ஈடுபட முடிவு செய்துள்ளது. இதன் ஹைலைட்டாக சமூக சிந்தனை நோக்கத்தோடு தமிழகம் முழுவதும் நியூஸ் ஜெ தொலைக்காட்சி நிர்வாகம் ஒரு கோடி மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன், விழாவில் அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழத்தினார்.
இது குறித்து நியூஸ் ஜெ இயக்குநர் தினேஷ்குதாரிடம் கேட்டபோது, நியூஸ் ஜெ நிர்வாகம் சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அடுத்த மூன்று மாதங்களுக்குள், அதாவது மழைக்காலம் தொடங்க உள்ளதால் அந்த நேரத்திலேயே 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் நடப்படும் மரக்கன்றுகளின் பராமரிப்பு பணிகளையும் நியூஸ் ஜெ தொலைக்காட்சி நிர்வாகமே மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியர் சுசி திருஞானம் மற்றும் சிஇஓ ஹன்ஸ்ராஜ் சக்சேனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்
ஒரு தொலைக்காட்சி என்பது சமூக பொறுப்புகளை கொண்டதாக இருக்க வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள். அதன் அடிப்படையில் தமிழகத்தை பசுமை மயமாக்க நியூஸ் ஜெ தொலைக்காட்சி எடுத்துள்ள முடிவை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். நாமும் பாராட்டுவோம் !! திட்டங்கள், எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துவோம்!!