Asianet News TamilAsianet News Tamil

MK Stalin : செம்மொழி சிறப்புகளை உலகெங்கிலும் கொண்டு புதிய திட்டம்.. மாஸ் காட்டும் முதல்வர் ஸ்டாலின்..!

 தமிழ் தொன்மையான மொழி என்பதைத் தமிழர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியமில்லை. உலகம் முழுவதும் இருக்கும் மொழியியல் அறிஞர்கள், இனவியல் அறிஞர்கள் அதைத்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாபெரும் உண்மை இது.

New project to bring Tamil specialties all over the world.. MK Stalin
Author
Chennai, First Published Jan 22, 2022, 3:36 PM IST

செம்மொழி சிறப்புகளை உலகெங்கிலும் கொண்டு செல்லும் வகையில் முதற்கட்டமாக தென்கிழக்கு ஆசிய நாட்டில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் செம்மொழித் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’க்கு தேர்வு செய்யப்பட்ட 10 அறிஞர்களுக்கு விருதினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதனையடுத்து, விழாவில் பேசிய முதல்வர்;- தமிழ் தொன்மையான மொழி என்பதைத் தமிழர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியமில்லை. உலகம் முழுவதும் இருக்கும் மொழியியல் அறிஞர்கள், இனவியல் அறிஞர்கள் அதைத்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாபெரும் உண்மை இது.

New project to bring Tamil specialties all over the world.. MK Stalin

தமிழ் குறிப்பிட்ட நாட்டு மக்கள் பேசும் மொழியாக மட்டுமல்ல, ஒரு பண்பாட்டின் அடையாளமாக இருக்கிறது நம்முடைய தமிழ் மொழியானது. நிலத்துக்கு, மண்ணுக்கு, இயற்கைக்கு, மக்களுக்கு, பண்பாட்டுக்கு இலக்கணத்தை வகுத்திருக்கக்கூடிய மொழி. தமிழைப் பேசும் போது இனிமையாக இருக்கிறது. தமிழைக் கேட்கும்போது இனிமையாக இருக்கிறது. ஏன், ‘தமிழ்’ என்று சொல்லும்போதே இனிமையாக இருக்கிறது. தமிழ் என்றாலே இனிமை என்றுதான் பொருள். ‘இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்’ என்று பிங்கலநிகண்டும் கூறுகிறது.தமிழ், உலகின் மூத்த மொழிகளில் ஒன்று. தமிழ், எந்த மொழியில் இருந்தும் கடன் வாங்கி உருவான கிளை மொழி அல்ல. தமிழில் இருந்துதான் ஏராளமான மொழிகள் உருவாகியுள்ளன. இப்படிப் பல மொழிகளை உருவாக்கும் திறன்கொண்ட மொழிதான், நமது தாய்மொழியான தமிழ். தமிழ், தமிழரசி, தமிழரசன் என்று மொழியின் பெயரையே பெயராக வைத்துக்கொள்ளும் அளவுக்கு பற்று நம் இனத்தில் இருக்கிறது. மொழிக்காக உயிரைத் தந்த தியாகிகளைப் பெற்ற மொழியும் நம் தமிழ்மொழி ஆகும்.

இலக்கியச் செழுமையும் இலக்கண அறிவும் கொண்ட மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் அறிஞர்கள் இடையே பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்தது. அந்தக் கனவை நிறைவேற்றி வைத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. 2004-ஆம் ஆண்டு அக்டோபர் 14-ஆம் நாள், மத்திய அரசால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழ்மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், அன்றைய மத்திய அரசால் 2007-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் நாள் தொடங்கி வைக்கப்பட்டது. தொடக்கத்தில் இந்த நிறுவனம், மைசூரில், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் இருந்து செயல்பட்டது. 2008-ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் நாள் முதல் சென்னைக்கு இந்த நிறுவனம் மாற்றப்பட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்போதுதான் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் என்று பெயர் சூட்டப்பட்டது. இதற்கும் காரணமாக இருந்தவர் தலைவர் கருணாநிதி.
சென்னை கடற்கரை காமராசர் சாலையில் உள்ள பாலாறு இல்லத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலகத்தை அவர், கடந்த 2008-ஆம் ஆண்டு சூன் 30-ஆம் திறந்து வைத்தார். செம்மொழி நிறுவனத்துக்கு எனத் தனியாக ஒரு கட்டடம் அமைய வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார், அதற்காக 2007-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் நாள் சென்னை பெரும்பாக்கத்தில் 16 ஏக்கர் நிலத்தை வழங்கினார்கள். சுமார் 1 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பில் அந்த இடத்தை சமப்படுத்தி வழங்கினோம்.

New project to bring Tamil specialties all over the world.. MK Stalin

அந்த இடத்தில் 24 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசு மாபெரும் கட்டடம் அமைத்துத் தந்துள்ளது. கடந்த 12-ஆம் தேதி அந்தக் கட்டடத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்திருக்கிறார். காணொலி வாயிலாக நடந்த அந்த விழாவுக்கு நான் முன்னிலை வகித்துப் பேசும்போது - ' இந்தியப் பிரதமர் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்துள்ளார்கள். அதற்காகத் தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும், அரசின் சார்பிலும், தனிப்பட்ட என் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுச் சொன்னேன். ''தலைவர் கருணாநிதி இன்று இருந்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளின்போது தமிழுக்கு இத்தகைய சிறப்பு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது" என்று குறிப்பிட்டுக் காட்டியிருப்பார்கள். அதன் பிறகு நானும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசும் பெரும்பாக்கம் சென்று தமிழாய்வு நிறுவனத்தைப் பார்வையிட்டோம். உண்மையில் மிகச் சிறப்பாக அந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தொடக்கம் முதல் இன்று வரை இதன் வளர்ச்சிக்குப் பாடுபட்ட அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் நான் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 41 செவ்வியல் தமிழ் நூல்களின் ஆய்வுக்கு முதலிடம் வழங்கி வருகிறது. தொல் பழங்காலம் முதல் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதிக்குள் தோன்றிய இலக்கிய, இலக்கணம் குறித்த ஆய்வினை மேற்கொள்ள உருவாக்கப்பட்டிருக்கக் கூடிய இந்த நிறுவனம், தமிழ்மொழி ஆய்விலும் அதன் மேம்பாட்டிலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. செம்மொழித் தமிழின் தொன்மையையும் தனித் தன்மையையும் அவற்றின் மரபுத் தொடர்ச்சியையும் ஆராய்ந்து பாதுகாப்பதை முக்கிய நோக்கமாக இந்நிறுவனம் கருதிக் கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் செம்மொழித் தமிழாய்வில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறது.

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கு, 2008-ஆம் ஆண்டு சூலை 24-ஆம் நாள், தனது சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை தலைவர் கருணாநிதி வழங்கினார். ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை’ என்ற பெயரால் ஓர் அறக்கட்டளையை நிறுவினார். இந்த அறக்கட்டளை சார்பில் தகுதிசால் தமிழறிஞர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

இந்தியாவிலேயே மிக உயரிய விருதாக, பத்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகை கொண்டது இந்த விருது. பாராட்டு இதழும், தலைவர் கருணாநிதியின் உருவம் பொறித்த நினைவுப்பரிசும் வழங்கப்படும். முதல் விருது 2010, ஜூன் 23-அன்று கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், அன்றைய குடியரசுத் தலைவரால் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘பேராசிரியர் அஸ்கோபார்ப்போலா’க்கு வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக ஆண்டுதோறும் இந்த விருதைத் தொடர்புடைய அரசுகள் வழங்கி இருக்க வேண்டும். அதை இந்த மேடையில் பேசி நான் அரசியலாக்க விரும்பவில்லை.

தமிழுக்கு, தமிழறிஞர்களுக்குச் செய்ய வேண்டிய பாராட்டுகள், மரியாதையில் கூட அரசியல் புகுந்ததன் காரணமாக, 2011-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை இந்த விருதுகள் வழங்கப்படவில்லை. திமுக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.வேறு எதற்காக இல்லாவிட்டாலும் , தமிழறிஞர்களுக்கு விருது கொடுப்பதற்காகவாவது, தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி மலர்ந்ததை நினைத்து இன்றைய நாளில் நான் பெருமைப்படுகிறேன். எப்போதும் தமிழுக்காகவே உழைத்திடும் திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்த போதெல்லாம், தமிழின் வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால்,நமது மாநிலத்துக்கு மொழியின் பெயரால் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியது, திமுக ஆட்சியில்தான். தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுவி, அதனை மாநிலப் பாடல் ஆக்கியதும் திமுக ஆட்சியில்தான்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளைப் அண்ணா தலைமையில் தொடங்கி, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வரை நடத்தி, தமிழை உலகளவில் கொண்டு சென்றது. அய்யன் வள்ளுவர் ,அவ்வையார் முதலான பழங்காலத் தமிழ்ப் புலவர்கள் தொடங்கி, கால்டுவெல், ஜி.யு.போப் போன்ற அயல்நாட்டுத் தமிழறிஞர்கள் வரை, திருவுருவச்சிலை நிறுவியதும் திமுக ஆட்சியில்தான். தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு சமூகநீதி வழியில் உயர்கல்வியில் இடஒதுக்கீடு தந்தது திமுக ஆட்சிதான்.வள்ளுவருக்குச் சென்னையில் கோட்டமும் , குமரியில் 133 அடியில் வானுயர்ந்த சிலையும் நிறுவி உலகமே அண்ணாந்து பார்க்க வைத்த ஆட்சிதான் திமுகஆட்சி.சுவடிகளில் இருந்து புத்தகங்களுக்குத் தமிழ் மாறியது போல், தமிழை இணையத்துக்குக் கொண்டு செல்ல 1999-லேயே தமிழ் இணைய மாநாடு நடத்தியதும், தமிழ் இணையக் கல்விக் கழகத்தை நிறுவி, இன்று உலகில் எங்கிருந்தாலும், தமிழ் இலக்கண, இலக்கியங்களை அனைவரும் படிக்கும் அளவிற்குத் தமிழை இணையப்படுத்தியதும் திமுக ஆட்சி தான்.இப்படி என்னால், ஒரு நீண்ட பட்டியலை சொல்லிக் கொண்டிருக்க முடியும்.

New project to bring Tamil specialties all over the world.. MK Stalin

இப்படித் திமுக ஆட்சி தமிழுக்கு ஆற்றிய பணிகளின் தொடர்ச்சியாகத் தான் இந்த விழாவில் சில அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைந்துள்ள மேடவாக்கம் – சோழிங்கநல்லூர் இணைப்புச்சாலை இனி “செம்மொழிச் சாலை” எனப் பெயர் மாற்றம் செய்யப்படும். செம்மொழிச் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் முதற்கட்டமாகத் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் ‘செம்மொழித் தமிழ் இருக்கைகள்’ அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்களை செம்மொழி நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. செம்மொழி நிறுவனம் முன்வைத்துள்ள இலக்குகளை அடைய, தமிழ்நாடு அரசு எப்போதும் துணை நிற்கும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios