கல்லூரி தொடங்கிய ஒரு மாதத்துக்குள் மத வகுப்புகள் நடத்தவில்லை என்றால் கல்லூரிகளை தொடர்ந்து நடத்த முடியாது என நீதிபதிகள்  எச்சரித்துள்ளனர். .

திமுக அரசு பதவியேற்றப் பிறகு கோவில் சொத்துக்களை மீட்பது, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் உள்ளிட்ட தடாலடி சட்டங்களையும் நடவடிக்கைளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அறநிலை துறை சார்பாக முக்கிய கோவில்களின் பெயர்களில் கல்லூரிகள் துவங்கப்படும் என சட்டபேரவையில் இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்திருந்தார். இதற்கென தமிழக சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் போது, ரூ.1,500 கோடி ரூபாய் மதிப்பில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதில், மாநிலம் முழுவதும் பத்து கோயில் கல்லூரிகளின் நிதியில் 150 கோடி ரூபாய் செலவில் கல்லூரிகள் துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் சென்னை கொளத்தூரிலும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் சார்பில் பரமத்திவேலூரிலும், பழனி தண்டாயுதபாணி கோவில் சார்பில் தொப்பம்பட்டியிலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் விளாத்திகுளத்திலும் என 4 இடங்களில் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் கடந்த அக்டோபர் 6-ந்தேதி அரசாணை பிறப்பித்தார்.

இந்த அரசாணைக்கு தடை விதிக்கக்கோரியும், அதை ரத்து செய்து, கோவில் சொத்துக்களை உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் பயன்படுத்த தடை விதிக்கக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் டி.ஆர்.ரமேஷ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணையில் கோவில் நிர்வாகங்களும் கல்லூரி தொடங்க அனுமதி கோரி விண்ணப்பிக்கவில்லை எனவும், கோவில்களில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்தில் கல்லூரிகள் அமைக்கப்படுவதாகவும், உபரி நிதியை, போதிய நிதி இல்லாத பிற கோவில்கள் சீரமைப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த அரசு வக்கீல்; தமிழக அரசு தரப்பில் இது அரசின் கொள்கை முடிவு என்றும், இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தை பின்பற்றியே கல்லூரிகள் தொடங்கப்படுவதாகவும், பல கோவில்களில் இருந்து பொது நிதிக்கு பெறப்பட்ட பங்களிப்பு நிதியில் இருந்து தான் கல்லூரிகள் தொடங்கப்படுவதாகவும், மத வகுப்புகளும் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்; அதேசமயம், 4 கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகளை அறங்காவலர்களை நியமிக்காமலும், நீதிமன்ற அனுமதியின்றியும் தொடங்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், ஏற்கனவே உள்ள 4 கல்லூரிகளில் இந்து மத வகுப்புகள் தொடங்க வேண்டும். கல்லூரி தொடங்கிய ஒரு மாதத்துக்குள் மத வகுப்புகள் நடத்தவில்லை என்றால் கல்லூரிகளை தொடர்ந்து நடத்த முடியாது எனவும் உத்தரவிட்டனர். மனுவுக்கு 3 வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 5 வாரங்கள் தள்ளிவைத்தனர்.