“ சோலிய முடிக்கிறது “  என்பதற்கு கொலை  செய் என்று அர்த்தமல்ல என்றும்  தோற்கடிக்க வேண்டும் என்பது தான் பொருள் என்றும் நெல்லை கண்ணன் ஆதரவாளர்கள் புது விளக்கம் அளித்துள்ளனர். 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரின் சோலியை முடிக்க மாடீங்கிறீங்களே என்று அவர் பேசிய பேச்சு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையடுத்து நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் நெல்லை கண்ணன் பேசியது லோக்கல் ஸ்லாங் தான் என்றும் அதன் அர்த்தம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும் அவரது ஆதரவாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

நெல்லை லோக்கல் ஸ்லாங்கில் ஒருவரை எதிர்த்துப் பேச "அவன் சோலிய முடிக்க மாட்டேங்காளே" என்று கூறுவது வழக்கம். இது நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சாதாரணமாக எல்லா மக்களும் பேசும் பேச்சு வழக்கு என்று அவர்கள் குறிப்ட்டுள்ளனர்.

இது அங்குள்ள மொழி நடை. இதற்கு அர்த்தம், அந்த ஆளைக் கொல்லு என்பதல்ல. அவன் பார்க்கிற வேலைய முடிக்க மாட்டேன் என்கிறார்கள் எனப் பொருள். அடுத்து " சாய்புமாரு முடிப்பாங்கனு பாத்தா, மாட்டேங்காகளே" என்பதற்கும் அதுதான் பொருள்."ஆட்சியில் உள்ளவர்களை எதிர்த்து வாக்களித்து அவர்களை கீழே இறக்குங்கள்" என்று தான் இதற்கு அரசியல் ரீதியாகப் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.

வட்டார வழக்கை புரியமுடியாதவர்களுக்கு அது பெரிய வன்முறை தாக்குதல் சொல் என்பதாகத் தான் புரியும் என்று கூறியுள்ள அவர்கள் நெல்லை கண்ணனை எச்சரித்த விட்டுவிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.