இங்க நடக்குறது பக்கத்து நாடுகள்ல தெரியுது..பாதுகாப்பே போச்சு.. மோடி அரசை விளாசிய கே.எஸ்.அழகிரி..!
நம் வீட்டில் நடப்பதெல்லாம் அண்டை நாடுகளில் தெரிகிறது. ஜனநாயகத்தையே சீரழிக்கும் இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்தியாவின் ஜனநாயகத்துக்கும், குடியரசுக்கும், பாதுகாப்புக்கும் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய ஆபத்து தற்போது ஏற்பட்டுள்ளது. அதை பாஜகவும் மோடி அரசும் மூடி மறைக்கிறது. இதைக் கண்டு பொதுமக்கள் கிளர்ந்தெழ வேண்டும். இல்லையெனில் நாடு அடிமைப்படுத்தப்பட்டுவிடும். இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தி நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், தொழிலதிபர்கள், ஊடகவியலாளர்கள் என சுமார் 300 பேருடைய தொலைபேசி இணைப்புகள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் அமைப்பில் இந்தியாவும் உறுப்பினர்தான். எங்கள் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சும் உளவு பார்க்கப்பட்டிருக்கிறது. நாட்டு ராணுவ ரகசியங்கள்கூட கண்காணிக்கப்பட்டிருக்கின்றன. இந்த சதித் திட்டத்துக்கு மோடி அரசு துணை போயுள்ளது. இந்தியாவில் உள்ள 3 முக்கிய உளவு அமைப்புகளுக்குக்கூட இது தெரியவில்லை. ஆனால், உள்துறை அமைச்சருக்குத் தெரிந்துள்ளது. பிரதமருக்குத் தெரிந்துள்ளது. இங்கே இந்தியாவின் பாதுகாப்பு எங்கே? நம் வீட்டில் நடப்பதெல்லாம் அண்டை நாடுகளில் தெரிகிறது. ஜனநாயகத்தையே சீரழிக்கும் இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. தன்னுடைய உளவு அமைப்புகளையும்கூட மத்திய அரசு நம்பவில்லை. அதிகாரிகள், நீதிபதிகள், ஊடகவியலாளர்கள் என எல்லோரும் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்துக்குப் பொறுப்பேற்று அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும். இதுதொடர்பாக பிரதமர் மோடி மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்தச் சுததிரம் நம் நாட்டுக்கு எளிதில் கிடைக்கவில்லை. ஏராளமான தலைவர்கள் போராடி சிறை வாழ்க்கையை அனுபவித்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி மிகச் சிறப்பாக இருந்தது. ஆனால், தற்போது தடுப்பூசி விவகாரத்தில் பிரதமர் மோடி தனது இரண்டு நண்பர்களுக்கு மட்டுமே உற்பத்தி உரிமையை வழங்கியிருக்கிறார்” என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.