தமிழக அரசு கொண்டு வந்துள்ள நீட் தடை சட்டத்தை யாரும் நம்பவேண்டாம் என பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா கூறினார்.
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என கல்லூரி மாணவர்கள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களின் போராட்ட களத்தில் சில தீய சக்திகள் புகுந்துவிட்டன. இதனால், அந்த தீய சக்திகளை நம்பி அவர்கள் ஏமாந்துவிட்டார்கள்.
ஜல்லிக்கட்டுக்கான மாணவர்களின் போராட்டத்தில், முதல்வர் ஓ.பி.எஸ். உடனடி நடவடிக்கை எடுத்தார். அவர் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்தது, பாராட்ட வேண்டியது.
மாணவர்களின் இந்த திடீர் போராட்டத்துக்கு திமுகவே காரணம். திமுவின் பின்னணியில், இந்த போராட்டம் நடந்தது.
மத்திய அரசின் பட்ஜெட் நடுத்தர ஏழை மக்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. தமிழக அரதசின் வறட்சி அறிக்கை மத்திய அரசுக்கு இதுவரை செல்லவில்லை. வறட்சிக்கான நிதி மத்திய அரசின் கைக்கு சென்றபின்னரே, வறட்சிக்காகன நிதி ஒதுக்கப்படும்.
பிரதமரின் புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் ஒரு பிரீமியம் கட்டினால் போதும். அதற்கான முழு காப்பீட்டு தொகையும், உரியவருக்கு சென்றடைந்துவிடும். மத்திய அரசின் இதுபோன்ற அருமையான திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தாமல் விட்டதால், தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள நீட் தடை சட்டத்தை யாரும் நம்பவேண்டாம். நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும். அவர்களின் எதிர் காலம் அது.
இவ்வாறு அவர் கூறினார்.
