எங்கு சென்ட்டர் போட்டிருக்கோ அங்கதான் போய் நீட் தேர்வு எழுதணும்…. தமிழக மாணவர்களுக்கு செமஅடி கொடுத்த உச்சநீதிமன்றம்….
தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலத்தில் நீர் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்த விவகாரத்தில், தற்போது மாணவர்களுக்கு எங்கு சென்ட்டர் ஒதுக்கப்படிருக்கிறதோ அங்கு போய்தான் நீட் தேர்வு எழுத வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் கலியமுத்து மைலவன் தாக்கல் செய்த மனுவில், நீட் தேர்வுக்காக தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், நாமக்கல், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் 10 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தேர்வு எழுத உள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் திருச்சி மாணவர்களுக்கு கேரள மாநிலத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விதிகளின்படி நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள மையங்களைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், தற்போது அண்டை மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது சட்ட விரோதமானது என தெரிவித்திருந்தார்..
இதற்கு பதில் அளித்து சிபிஎஸ்இ கடந்த ஏப்.18-ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்வு மைய ஒதுக்கீட்டில் மனித குறுக்கீடுகள் எதுவும் இல்லை. இந்த ஒதுக்கீடுகள் அனைத்தும் கணினி மூலம் ஒதுக்கப்பட்டவை. எனவே, ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களை மாற்றி அமைக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இப்பிரச்சனை குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.. இதனை விசாரித்த நீதிபதிகள், தற்போது நீட் தேர்வு எழுத மாணவர்களுக்கு எங்கு சென்ட்டர் ஒதுக்கப்பட்டிருக்கிறதோ அங்குதான் போய் நீட் தேர்வு எழுத வேண்டும் என உத்தரவிட்டனர்.
தற்போது வேறு மையங்களை அமைக்க கால அவகாசம் இல்லாததால் இந்த ஓர் ஆண்டு மட்டும் ஏறகனவே போடப்பட்ட மையங்களில் எழுத வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.