இந்த நேரத்துல இந்த மசோதா தேவையா? போக்குவரத்து தொழிலாளர்களை உசுப்பேற்றிய ஸ்டாலின்!
போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனை இருக்கும்போது, எம்.எல்.ஏ.க்களின் ஊதிய உயர்வு தேவையில்லை என்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழக எம்.எல்.ஏ-க்களின் சம்பள உயர்வு தொடர்பாக மசோதாவை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1.05 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்தார். ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து இந்த உயர்த்தப்பட்ட சம்பளம் நடைமுறைக்கு வரும் என்றும் கூறியிருந்தார்.
எம்.எல்.ஏ.க்களின் சம்பள உயர்வுக்கு, பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. ஆனால் திமுக கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக முன்னாள் எம்.எல்.ஏ. கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில், எம்.எல்.ஏ.க்கள் சம்பள உயர்வு தொடர்பான மசோதாவை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.
அதன் அடிப்படையில் 50 ஆயிரம் ரூபாயாக இருந்த சம்பளம் 1.05 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியும் 2,50,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதிய தொகை ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் குடும்ப ஓய்வூதிய தொகை 10,000 ரூபாயாக வழங்கப்படுகிறது.
எம்.எல்.ஏ.க்களின் சம்பள உயர்வு தொடர்பாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனை இருக்கும்போது ஊதிய உயர்வு தேவையில்லை என்று திமுக தரப்பில் கூறப்பட்டது. தமிழகம் பெரும் நிதிச்சுமையில் சிக்கியுள்ளதாக அரசே கூறி வரும் நிலையில், எம்.எல்.ஏ.க்களின் சம்பள உயர்வு தேவையா? என்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.