நடராஜன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்...! - மருத்துவர்கள் தகவல்...!
நடராஜனுக்கு அறுவை சிகிச்சை முடிந்து இன்றுடன் 19 நாட்கள் நிறைவடைந்த நிலையில் அவருக்கு பொருத்தப்பட்டுள்ள கல்லீரல் மற்றும் சிறுநீரகம் நல்ல முறையில் இயங்குவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவின் கணவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து மூளை சாவு அடைந்த ஒருவரின் கல்லீரலும் சிறுநீரகமும் நடராஜனுக்கு பொருத்தப்பட்டது. ஆனாலும் இந்த அறுவை சிகிச்சையில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. இருந்தும் அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதனிடையே நடராஜனின் மனைவி சசிகலா பரோலில் வெளியே வந்து அவரை நலம் விசாரித்து விட்டு சென்றார்.
இந்நிலையில், நடராஜனுக்கு அறுவை சிகிச்சை முடிந்து இன்றுடன் 19 நாட்கள் நிறைவடைந்த நிலையில் அவருக்கு பொருத்தப்பட்டுள்ள கல்லீரல் மற்றும் சிறுநீரகம் நல்ல முறையில் இயங்குவதாகவும் அறுவை சிகிச்சைக்கு பிறகு அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.