தமிழருவி மணியன் சொன்னதை கேட்டிருந்தால் கல்லறையில் காந்தி புரண்டு படுத்திருப்பார்...? நாஞ்சில் சம்பத் கிண்டல்...
மதிமுகவில் இருந்து நாஞ்சில் சம்பத், கடந்த 2012 ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, சசிகலா
தலைமையிலும், டிடிவி தினகரன் அணியிலும் செயல்பட்டு வந்தார்.
டிடிவி தினகரன் அணியில், தனக்கு முக்கியத்துவம் இல்லாத காரணத்தால் அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்திருந்தார். இதன் பிறகு, வைகோவுடன் மீண்டும் இணைவதாக செய்திகள் வெளியானது. இதனை நாஞ்சில் சம்பத் மறுத்தார்.
அண்மையில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் மதிமுக பொது செயலாளர் வைகோவை, நாஞ்சில் சம்பத் சந்தித்துப் பேசியிருந்தார். விரைவில்
மதிமுகவில் அவர் மீண்டும் ஐக்கியமவார் என்று மகூறப்படுகிறது.
இந்த நிலையில் நாஞ்சில் சம்பத்திடம் பிரபல வார இதழ் ஒன்று நேர்காணல் நடத்தியது. அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்திடம் காந்தியைப் பார்க்கிறேன் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, இதைக் கேட்டு
கல்லறையில் புரண்டு படுத்திருப்பார் காந்தி என்று கூறியுள்ளார்.
சமூக விரோதிகள் ஊடுருவி விட்டதாக ரஜினிகாந்த் பேச்சு பற்றிய கேள்விக்கு, ரஜினிகாந்த் முட்டாள்களின் சொர்கத்தில் இருக்கிறார். அறிவார்ந்த ரீதியில்
அவரால் பயணிக்க முடியாது என்பது ஏற்கனவே நான் அனுமானித்ததுதான்.
ஆனால், உரிமைக்குப் போராடுகிறவனின் வியர்வையைக கொச்சைப்படுத்துகிற அநியாயத்தைச் செய்கிற ஒரு பூர்ஷுவாக இவர் அவதாரம் எடுப்பார் என்று நான்
கணவிலும் நினைக்கவில்லை.
திரையுலகம் என்ற பிம்பத்தில் இருந்து கொண்டு, தான் சொல்வதெல்லாம் வேதம் என்று கருதிக் கொள்கிற ரஜினிகாந்த், தமிழகத்தின் தட்பவெப்பத்துக்கு ஏற்ற தலைவன் அல்ல என்று கடுமையாக சாடினார்.
நாஞ்சில் சம்பத் கூறிய இந்த கருத்தால், ரஜினி ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சமூக வலைத்ளங்களிலும் நாஞ்சில் சம்பத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.