மதிமுகவுக்கு திரும்புகிறாரா நாஞ்சில் சம்பத் ?
அரசியலில் இருந்து விலகுகிறேன் , இனி என்னை இலக்கிய மேடைகளில் மட்டுமே பார்க்க முடியும் என அறிவித்த நாஞ்சில் சம்பத் தற்போது மீண்டும் மதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுளளன.
வைகோவின் வலது கரமாக செயல்பட்டவர் நாஞ்ல் சம்பத். மதிமுகவில் இருந்து பெரும்பாலானோர் விலகி மாற்றுக்கட்சிகளுக்கு சென்றுவிட்ட நிலையில் நாஞ்சில் சம்பத் மட்டும் வைகோவுடன் இருந்தார்.
ஆனால் அவரும் அங்கிருந்து விலகி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு துணை கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி வழங்கிய ஜெயலலிதா இன்னோவா கார் ஒன்றையும் பரிசாக அளித்தார்.
ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து விலகுவதாக நாஞ்சில் சம்பத் அறிவித்தார். ஆனால் அவரை நேரில் சந்தித்த சசிகலா, கட்சியில் இருந்து விலக வேண்டாம் என்றும் தொடர்ந்து அதிமுகவிலேயே பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதனால் தொடர்ந்து அக்கட்சியிலேயே இருந்தவர், அதிமுக இரண்டாக உடைந்தபோது டி.டி.வி.தினகரன் ஆதரவை எடுத்தார்.
அண்மையில் தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக கழகம் என்ற பெயரில் புதிய அமைப்பைப் தொடங்கியபோது, அந்த பெயரில் திராவிடம் இல்லை என்றும், தினகரன் பட்டப் பகலில் பச்சைப் படுகொலை செய்து விட்டார் எனவும் குற்றம்சாட்டினார்.
இதனால் தான் அரசியலில் இருந்து விலகுவதாகவும், இனி என்னை இலக்கிய மேடைகளில் மட்டுமே பார்க்க முடியும் என்றும் கூறினார்.
இந்நிலையில் நேற்று மாமல்லபுரத்தில் நடந்த இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பஷூர்அகமதின் மகன் திருமணத்தில் வைகோ உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். வைகோ மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது நாஞ்சில் சம்பத் வந்தார். மேடையின் கீழ் அமர்ந்தார்.
அப்போது மல்லை சத்யாவுடன் நெருக்கமாக பேசிக்கொண்டிருந்தார். பின்னர் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
சத்யாவும் நாஞ்சில் சம்பத்தும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தும், வைகோ இருக்கும்போதே நாஞ்சில் சம்பத் வந்ததைப் பார்த்ததும் நாஞ்வில் சம்பத் மீண்டும் மதிமுகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.