"என்னிடம் அடிமைத்தனம் கொஞ்சம் கூட கிடையாது! முன் வெச்ச காலை பின்வைக்க மாட்டேன்"!: இத சொல்றது நம்ம நா.சா..!!
திகாரிலிருந்து விடுதலையாகி வெளியே வருகையில் கோடிக்கணக்கான தமிழர்கள் தினகரனை வரவேற்க வருவார்கள்:_ என்று ஒரு டயலாக்கை சொல்லி உலக தமிழ் சமுதாயத்தின் வசவுகளை வளமாக வாங்கிக் கட்டிக் கொண்டவர் நாஞ்சில் சம்பத்.
தினகரன் மற்றும் சசிகலாவுக்கு ஆதரவாக இவரும், பெங்களூரு புகழேந்தியும் ஆடும் டன் டனா டன்...ஜியோ விளம்பரத்தை விட மோசமா இருக்குய்யா என்று இவர்களின் குடும்பமே குத்தி காட்டிய பிறகும் மாறுவதாக இல்லை. இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக்கியதன் மூலம் அம்மா தவறு செய்துவிட்டார்கள் என்று ஜெ.,வையே நாஞ்சில் விமர்சித்ததாக ஒரு பிரச்னை எழுந்திருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து விளக்க ஆரம்பித்திருக்கும் நாஞ்சில் ”நன்றி மற்றும் விசுவாசம் எனும் சொல்லுக்கு பொருள் தெரியாத ஜென்மமமாய், வாழ்க்கை கொடுத்த கட்சியையே துரோக வாளால் வெட்டும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு முதல்வர் பதவி உள்ளிட்டவற்றை வழங்கியது தவறு என்கிற ரீதியில் சொல்லியிருந்தேன். இதைத்தான் அம்மாவை நான் விமர்சித்ததாக உருவேற்றிவிட்டார்கள்.
அடிப்படையில் நான் ஒரு விமர்சகன். விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை என கருதும் நபர் நான். அதனால் விமர்சனப் பார்வையோடுதான் நான் சொன்னதை அணுக வேண்டும்.
இந்த பக்குவமெல்லாம் புரியாமல் பன்னீர் அணியை சேர்ந்த முணுசாமி, மதுசூதனன் போன்றவர்கள் குதிப்பது அர்த்தமற்றது. உச்சநீதிமன்ற தீர்ப்பில் அம்மாவுக்கு நூறு கோடி ரூபாய் அபராதம் விதிப்பு என்று அறிவிப்பு வெளியானதும் ஓ.பி.எஸ்.வீட்டு வாசலில் பட்டாசு வெடித்து கொண்டாடிய கூட்டம் அது.
அவர்களிடம் போய் நல்லதை எதிர்பார்க்க முடியுமா?” என்று போட்டுப் பிளந்தவர் பின்னர் தன்னை பற்றி சில சுயவிமர்சன வாக்கியங்களை எடுத்து வைத்திருக்கிறார். அதைத்தான் இந்த பூமி எப்படி பொறுத்துக் கொள்ளுமோ புரியவில்லை...
அப்படி இன்னாதான் சொன்னாரு நம்ம இன்னோவா சம்பத்து?...’’என்னிடம் அடிமைத்தனம் கொஞ்சங்கூட கிடையாது. நான் சொன்னதை எப்போதும் திரும்பப் பெறக்கூடியவன் இல்லை. முன்னால் வைத்த காலை என்றும் பின்னால் வைக்கும் பழக்கமும் இல்லை. பன்னீர் அணியை போல் பதவி ஆசைக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. தமிழ்த்தாய் எனக்கு வரம் கொடுக்கும் வரை என் பயணத்தை யாரும் தடுத்து நிறுத்திட முடியாது. ஆனால் இவர்களுக்குதான் கட்சியை விட்டால் பிழைக்க வேறு வழியில்லை.” என்று இடிமுழக்கம் செய்திருக்கிறார்.
நாஞ்சிலை பார்த்து தமிழ் பேசும் சமூகம் வைக்கிற சில கேள்விகள்...
“அடிமைத்தனம் கிடையாதுன்னு சொல்றீங்களே? அப்போ அரெஸ்டான தினகரனை ஏர்போர்ட் கொண்டு வந்தப்ப பதறி நின்னு வரவேற்றீங்களே, இன்னைக்கு ஊர் ஊரா அவர் புகழ் பாடிட்டு திரியுறீங்களே அது பேரு என்ன?
முன்வெச்ச காலை பின் வைக்க மாட்டேன்னு பாபா ரஜினியாட்டமா சீன் போடுறீங்களே!...அப்போ ஜெ., மரணத்துக்கு பிறகு இன்னோவாவை நண்பர் வீட்டு போர்டிகோவுல நிறுத்திட்டு அ.தி.மு.க.வைவிட்டு வெளியேறும் மூடுல வாசல் வரைக்கு வந்துட்டு அப்புறமா சின்னமா அழைச்சதாலே சந்திச்சு பேசி டபால்னு அந்தர் பல்டி அடிச்சீங்களே அதுக்குப் பேரு என்ன?
சரி இப்படியெல்லாம் நாங்கள் கார்னர் பண்ணி கேள்வி கேட்டா மனசு கஷ்டப்படவா போறீங்க? காறி துப்பினாலும் துடைச்சுட்டு என் வழியில போயிட்டே இருப்பேன்னு போனவராம்தானே சொன்னீங்க.”