ஒன்றேகால் கோடி சிங்களர்களால் செய்யமுடிந்ததை, 13 கோடி தமிழர்களால் செய்ய முடியாதா..?? பொங்கி எழுந்த சீமான்
ஒன்றே கால் கோடி சிங்களர்கள் 10000க்கும் மேற்பட்ட கையெழுத்துகள் என்றால் பதிமூன்று கோடி தமிழர்கள் எத்தனை இலட்சம் கையெழுத்துகளைப் பெற முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்,
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றது உள்நாட்டுப் போர் அல்ல, இனப்படுகொலை என குரல் கொடுத்துவரும் ஆஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் ஹக் மெக்டெர்மோட் அவர்களுக்கு ஆதரவான கையொப்பம் இட்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் :- பேரன்புக்கொண்டு நான் பெரிதும் நேசிக்கின்ற என் அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! ழத் தாயகத்தில் நம் இனம் அழித்தொழிக்கப்பட்டதில் இருந்து அந்த அநீதிக்கான நீதியைப் பெற பன்னாட்டுச் சமூகத்திடம் நாம் தொடர்ச்சியாக போராடி வருகிறோம். நமக்கென்று உலக அரங்கில் ஆதரவு கரம் நீட்டவோ குரல் எழுப்பவோ ஒருவரும் இல்லாத நிலையில் தனித்து விடப்பட்ட ஒரு தேசிய இனத்தின் மக்கள் நாம் தொடர்ச்சியாகப் போராடி வருகிறோம். இச்சூழலில் ஆஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினரான மாண்புமிகு ஹக் மெக்டெர்மோட் (Hugh McDermott) அவர்கள் நமக்கு ஆதரவாக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறார். அண்மையில் அங்கு நடைபெற்ற மே 18 நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை தான் என்ற கருத்தை உறுதிபட தெரிவித்துள்ளார்.
உலகின் பல நாடுகளில் பல்வேறு தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கூட இனப்படுகொலை என்று பதிவுசெய்ய பயப்படுகிற சூழலில் வெறும் போர்க்குற்றம் என்று பூசி மொழுகுகிற இக்காலக்கட்டத்தில் அங்கு நடந்தது இனப்படுகொலை தான் என்று தமிழர் அல்லாத ஒருவரினுடைய குரல் உலக அரங்கில் ஒலிப்பது என்பது நமது போராட்டத்திற்கு மிகவும் வலுச்சேர்க்க கூடிய ஒன்றாகும். ஆனால் அவருக்கு ஆஸ்திரேலியா மண்ணில் வாழ்கிற சிங்களர்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் வாழும் சிங்களர்களும் எதிர்ப்பு தெரிவித்து, அவர் பொய் சொல்வதாகவும் அவரது கருத்தை ஏற்க கூடாது என்றும் ஆஸ்திரேலியா அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். எனவே தொடர்ந்து நமக்காக குரல் எழுப்பி வரும் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஹக் மெக்டெர்மோட் அவர்களுக்கு எதிராக பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களுடைய கருத்தைப் பதிவுசெய்து வருகிறார்கள். ஒன்றே கால் கோடி சிங்களர்கள் 10000க்கும் மேற்பட்ட கையெழுத்துகள் என்றால் பதிமூன்று கோடி தமிழர்கள் எத்தனை இலட்சம் கையெழுத்துகளைப் பெற முடியும் என்பதை சிந்திக்க வேண்டும், பாதிப்புக்கு உள்ளாக்கியவர்கள் ஒன்றிணைந்து நிற்கிற போது பாதிக்கப்பட்ட மக்கள் நாம் எவ்வளவு பேரெழுச்சியாக ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்பதை உங்களுக்கு நான் கூறி உணர்த்த வேண்டிய தேவையில்லை. ஆனால் இச்சூழலில் 5000க்கும் குறைவான ஆதரவு கையெழுத்துகளே பெறப்பட்டுள்ளது என்பது வருத்தமளிக்கிறது.
இக்காணொளியைப் பார்க்கின்ற என் உடன் பிறந்தார்கள், என் உயிருக்கும் மேலான உறவுகள் நீங்கள் அனைவரும் ஹக் மெக்டெர்மோட் அவர்களின் கருத்தை வலுப்படுத்தும் நோக்கோடு உலகம் தழுவி முன்னெடுக்கப்படும் கையெழுத்து இயக்கத்தில் அனைவரும் பங்கேற்று கையெழுத்திட்டு பேராதரவைத் தரவேண்டும். கீழுயேள்ள இணைப்பு (link)இல் சென்று அவருக்காக கையொப்பமிடுங்கள். https://www.change.org/p/mp-hugh-mcdermott-we-demand-that-hugh-mcdermott-sustain-his-support-for-the-australian-tamil-community ஈழத் தாயகத்தில் நிகழ்த்தப்பட்டது இனப் படுகொலை தான் என்ற நம்முடைய கருத்தை உலக அரங்கில் ஒலிக்கச் செய்ய இவருக்கு ஆதரவு கொடுப்பதில் தான் மற்றவர்களும் வலுசேர்க்க வருவார்கள். அதனால் ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளைகளும் தயவுகூர்ந்து இதை ஒரு பெரும் பொறுப்பாக பிறவிக் கடனாக எடுத்துக்கொண்டு இதில் கவனமெடுத்து அவருக்கு ஆதரவாக கையெழுத்திட வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன். ஆஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினரான மாண்புமிகு ஹக் மெக்டெர்மோட் அவர்களுக்கு ஆதரவாக இக்கையெழுத்துப் பரப்புரையை முன்னெடுத்து இருக்கின்ற என் அன்பிற்கினிய தம்பிகள் அண்ணாதுரை, லாரன்ஸ், இஸ்மாயில் மீரான், பொன்ராஜ், விஜயகுமார், முருகன் ஆகியோருக்கு என் அன்பு நிறைந்த வாழ்த்துகள்.இது ஒவ்வொருவரின் கடமை. நாம் அனைவரும் இதில் கவனம் செலுத்தி பல கோடிக்கணக்கான கையெழுத்தாக இதை மாற்றுவோம். என சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.