மருத்துவர் ஆக்கவா? மனநோயாளி ஆக்கவா? நீட்-ஐ கடுமையாக விமர்சித்த 'நமது அம்மா'
பல்வேறு குளறுபடிகளுக்கு இடையில் கடந்த ஞாயிறு அன்று நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த வருடம் நடத்தப்பட்ட நீட் தேர்வின்போதும், தேர்வு எழுத சென்ற மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். 2 நிமிடம் தாமதம் காரணமாக நீட் தேர்வெழுத மறுக்கப்பட்ட சம்பவங்கள் பல்வேறு இடங்களில் நிகழ்ந்துள்ளது.
நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர்களின் தந்தையர் 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அலைகழிப்பு காரணமாக அவர்கள் உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில் நீட் தேர்வை விமர்சனம் செய்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவில் கவிதை ஒன்று எழுதப்பட்டுள்ளது. ஆத்தாடி தெய்வக்குத்தம் என்ற பெயரில் கவிதை வெளியிடப்பட்டுள்ளது. நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவிதையில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
சாறு எடுத்து வருபவர்களுக்கும் சக்கையைக் கொண்டு வருபவர்களுக்கும் சம உரிமை என்று அதில் எழுதப்பட்டுள்ளது. நீட் தேர்வில் படிக்காத பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக மாணவர்கள், வேறு மாநிலங்களில் தேர்வு மையம் அமைத்தது குறித்தும் கவிதையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. கவிதையின் முடிவில், இந்த நீட் தேர்வு மாணவர்களை மருத்துவர்கள் ஆக்கவா? அல்லது மனநோயாளி ஆக்கவா என்று முடிகிறது.