Namadhu Amma daily news paper will be published from 24th feb
2018 ஆம் ஆண்டு பிப்ரவர் 24 ஆம் தேதி முதல் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக “ நமது அம்மா” நாளிதழ் வெளியிடப்படும் அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக “ நமது எம்.ஜி.ஆர்” இருந்து வந்தது. இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அதிமுக இரண்டாக உடைந்ததது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் தலைமையில் ஓர் அணியும் டி.டி.வி.தினகரன் தலைமையில் ஓர் அணியும் செயல்பட்டு வருகிறது.

கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவை தொடர்பாக நடைபெற்ற பஞ்சாயத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பிற்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. கட்சியும், ஆட்சியும் கிடைத்தாலும் தங்களது கொள்கைகள், ஆட்சியின் சாதனைகள் போன்றவற்றை ஒளிபரப்ப ஊடகங்கள் இல்லாமல் திணறி வந்தனர்.
ஏனென்றால், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆர் மற்றும் தொலைக்காட்சியான ஜெயா தொலைக்காட்சி ஆகியவை டி.டி.வி.தினகரன் தரப்பின் கையில் இயங்கி வருகிறது.

இதனால் தங்களது தரப்பு செய்திகளை வெளியிடவும், ஒளிபரப்பவும் புதிய நாளேடு தொடங்கவும், புதிய தொலைக்காட்சி தொடங்கவும் அக்கட்சியினர் முடிவு செய்தனர். 10 நாட்களுக்கு முன்பு ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு, இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளான இன்று, “ நமது அம்மா” நாளேடு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஜெயலலிதா பிறந் நாள் முதல் இந்த நாளேடு வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
