ராஜேஷ்குமார் நாவலை மிஞ்சும் மர்மம்... கோடநாடு விவகாரம் சாதாரண விஷயமல்ல... திணறடிக்கும் திமுக..!
கோடநாடு பங்களா ஒரு தலைமைச் செயலகமாக இயங்கியது. அப்படிப்பட்ட இடத்தில் ஒரு கொள்ளையும் அதனை தொடர்ந்து கொலையும் நடந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல; ஜெயக்குமாருக்கு வேண்டுமானாலும் அது சாதாரணமாக இருக்கலாம்
எடப்பாடி பழனிசாமிக்கு மன அழுத்தத்தை கொடுக்கவே சட்டமன்றத்தில் கோடநாடு விவகாரம் பேசப்படுகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியிருந்த நிலையில், ’’ராஜேஷ்குமார் நாவலை விட கோடநாடு விவகாரத்தில் மர்மம் அடங்கி இருக்கிறது. கோடநாடு விவகாரத்தில் நீங்களாவது எங்களுக்கு நீதி பெற்றுத் தாருங்கள் என்று அதிமுகவினர் தான் சிலர் என்னிடம் கேட்கிறார்கள்’’என காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். கோடநாடு விவகாரத்தை நாங்கள் சட்டப்படி அணுகுகிறோம்; அதிமுகவைப் போல ஆளுநரை சந்திக்கவோ, பதற்றப்படவோ இல்லை என்று தெரிவித்தார். மேலும், கோடநாடு விவகாரத்தை சட்டப்படி அணுக திராணி இல்லாமல், அதிமுக பதறி அடித்துக்கொண்டு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்ப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘’கோடநாடு விவகாரத்தை முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் கொண்டுவந்ததே இ.பி.எஸ். தான்; ஆனால், இப்போது அந்த பிரச்னையை சட்டப்பேரவை உள்ளே பேசக்கூடாது என அதிமுக சொல்வது முரணாக உள்ளது.
கோடநாடு பங்களா ஒரு தலைமைச் செயலகமாக இயங்கியது. அப்படிப்பட்ட இடத்தில் ஒரு கொள்ளையும் அதனை தொடர்ந்து கொலையும் நடந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல; ஜெயக்குமாருக்கு வேண்டுமானாலும் அது சாதாரணமாக இருக்கலாம்’’என தெரிவித்துள்ளார்.