mutharasan talks about rajinikanth
ரஜினியின் அரசியல் பிரவேசம் அவரது ரசிகர்களுக்கு வேண்டுமானாலும் கொண்டாட்டமாக இருக்கலாம், ஆனால் நெட்டிசன்களுக்கு அப்படி இல்லை. சும்மா சகிட்டு மேனிக்கு கிழித்து தொங்க விட்டிருக்கின்றனர். நாளொரு வண்ணமும் பொழுதொரு தினமாக புதிய புதிய லே அவுட்டில் மீம்ஸ்கள் றெக்கை கட்டி பறக்கின்றன.
போதாத குறைக்கு வீடியோ மீம்ஸ்கள் வேறு...இத்தனையும் சகித்து, கடந்து சென்றிருக்க வேண்டிய ரஜினியோ, விமர்சனம் என்ற பெயரில் தரம் தாழ்ந்து போய்விட்டனர் என்று கூறி, வம்பில் சிக்கிக் கொண்டு விட்டார்.

இந்தச் சூழலில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று திட்டவட்டமாகக் கூறவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினியைத் தாண்டியும் தமிழக மற்றும் மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கத் தவறவில்லை.
முத்தரசன் கூறுகையில் "தலைமைச் செயலகத்தில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆய்வு செய்தது அத்துமீறிய செயல். இது மாநில சுயாட்சிக்கு எதிரானது. அதிமுகவை இரு அணிகளாக பிரித்து மாநில அரசை மத்திய அரசு மிரட்டி வருகிறது. சட்டப்பேரவையை தமிழக அரசு உடனடியாகக் கூட்ட வேண்டும்." இவ்வாறு முத்தரசன் கூறினார்.
