போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்திற்கு ஆர்.எஸ் பாரதி ஐடியா...
போலி வாக்காளர்களை நீக்கிவிட்டாலே தேர்தல் நேர்மையாக நடைபெறும் திமுக அமைப்பு செயலாளரும் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கான வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டு வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டன.
ஆனால் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்வதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் மேல் புகாராக வந்த வண்ணம் இருந்தன. அதற்கான ஆதாரங்களும் திரட்டப்பட்டன.இதனால் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில், திமுக அமைப்பு செயலாளரும் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்காணியை சந்தித்து தேர்தல் குறித்து மனு ஒன்றை அளித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ் பாரதி கூறியதாவது:
போலி வாக்காளர்களை நீக்கிவிட்டாலே தேர்தல் நேர்மையாக நடைபெறும்
ஆர்.கே.நகரில் 43 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் இருமுறை இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு தொகுதியிலும் 30 ஆயிரம் வாக்களர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வாக்காளர்கள் பெயர் பட்டியல் அனைத்தையும் சரிபார்க்க வேண்டும்.
பா.ஜ.கவை போல் அதிமுகவும் மதவாத கட்சியே. கருணாநிதியின் வைர விழாவிற்கு பா.ஜ.கவுக்கு அழைப்பு விடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.