கேரள முதல்வருக்கு துபாயிலிருந்து பகிரங்க கொலை மிரட்டல்!!
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு துபாயிலிருந்து ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்த கிருஷ்ண குமார் நாயர் என்பவர் அபுதாபியில் கட்டுமான கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். கேரள முதல்வரை கொலை செய்யப்போவதாக கூறி இவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “நான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவன். 2-3 நாட்களில் கேரளாவுக்கு வர உள்ளேன். அங்கு சென்று முதல்வரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளேன் என தெரிவித்திருந்தார். இந்த வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவரது பதிவை கண்டு அவர் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் மற்றொரு வீடியோவை வெளியிட்ட அவர், அந்த வீடியோவை வெளியிட்ட போது மது அருந்தியிருந்ததாக தெரிவித்தார். கேரள தொலைக்காட்சியை சேர்ந்த ஒருவர் பாஜக பெண் தலைவருக்கு எதிராக தரக்குறைவான கருதுக்களை கூறியிருந்தார். ஆனால், போலீசார் அதனை கண்டு கொள்ளவில்லை. முதல்வரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் அப்படி ஒரு வீடியோவை வெளியிட்டதாக தெரிவித்தார்.
தான் எந்த நடவடிக்கைக்கும் தயாராக உள்ளதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அனைத்து அரசியல்வாதிகளிடமும் மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.