பாஜக, பாமக வினருக்கு திமுக பதிலடி !! முரசொலி அலுவலகத்தின் மூலப்பத்திரம் தாக்கல் !!
சென்னை 'முரசொலி அலுவலகம், பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது அல்ல' என்பதற்கான, மூலப்பத்திரத்தை, சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில், தி.மு.க., தாக்கல் செய்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், அசுரன் படம் வெளியானது. இப்படத்தை பார்த்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தனது 'டுவிட்டர்' பதிவில், 'பஞ்சமி நிலம் குறித்து பேசும், அசுரன் படம் அல்ல; பாடம்' என, கருத்து தெரிவித்து இருந்தார்.
அதை விமர்சித்த, பாமக நிறுவனர் ராமதாஸ், 'சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள, முரசொலி நாளிதழ் அலுவலகம், பஞ்சமி நிலத்தில் தான் உள்ளது' என, குற்றம் சாட்டினார்.
இதே கருத்தை, தமிழக பா.ஜ., நிர்வாகி சீனிவாசனும் கூறினார்.இவர்கள் மீது, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த வழக்கு, எழும்பூர், 14வது நீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.பாரதி ஆஜராகி, 'முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளேன். முரசொலி அலுவலகம், பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது அல்ல' என, பிரமாண வாக்குமூலம் அளித்தார்.
மேலும், அந்த நிலத்திற்கான மூலப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களையும் தாக்கல் செய்தார். இதையடுத்து, வழக்கு விசாரணை, ஜனவரி 24க்கு தள்ளி வைக்கப்பட்டது.