Munusamy said But the governor should not have done it
பன்னீர் அணியிலிருக்கும் போது சசி, எடப்பாடி, தினகரன் உள்ளிட்ட தங்கள் எதிரிகளை தவுசண்ட் வாலா பட்டாசு போல் அதிரடியாய் விமர்சித்து தள்ளியவர் மாஜி முணுசாமி. இப்போது ஆளும் அணியின் அங்கமாக மாறிய பின் சில விஷயங்களில் ஊசிப்போன ஓல பட்டாசு போல் பேசுகிறார் மனிதர். குறிப்பாக கவர்னரின் கோயமுத்தூர் ஆய்வு அதிரடிக்கு, போயஸ் ரெய்டுக்கும் அவரது ரியாக்ஷன் புஸ்ஸ்ஸ்ஸ்வாணமாய் இருப்பதாக கட்சியினரே கலாய்க்கின்றனர்.
இந்த இரண்டு விஷயங்கள் தொடர்பாகவும் லேசாக வாய்திறந்திருக்கும் முணுசாமி “போயஸ் கார்டனில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியிருப்பது வருத்தமளிக்கிறது. அம்மா இறந்ததும் அந்த இல்லத்தை நினைவிடமாக்கிவிட்டு சசி குடும்பத்தினர் வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல் அரசியல் ஆதாயத்திற்காக அங்கே குழப்பத்தை உருவாக்குகின்றனர்.
கோயமுத்தூரில் தமிழக கவர்னர் புரோகித், அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியது வேதனையளிக்கிறது. தமிழக அரசு செயல்பாட்டில் கவர்னருக்கு சந்தேகம் இருந்தால் முதல்வர், தலைமை செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகளை ராஜ்பவனுக்கு அழைத்து விசாரித்து தெரிந்து கொள்ளலாம்.
தகவல் கேட்டால் நாங்க என்ன கொடுக்க மாட்டோமுன்னா சொல்லிடுவோம்? அதைவிடுத்து இப்படி ஆய்வு செய்தால் எப்படி? மற்ற மாவட்டங்களிலும் இப்படி ஆய்வு செய்வேன் என்று சொல்லியிருப்பது தவறான உதாரணம். உண்மையிலேயே வேதனை தரும் இந்த நடவடிக்கையை அவர் தவிர்க்க வேண்டும்.” என்று முணுமுணுத்திருக்கிறார்.
முணு சார் எங்கே இதையே கொஞ்சம் சத்தமா சொல்லுங்களேன் பார்ப்போம்!
