இதற்குத்தானே ஆசைப்பட்டீங்க கவர்னர் சார்: எடப்பாடி - முணுசாமி கர்! புர்! உர்!
கவர்னர் வீசிய ஆய்வு வெடிகுண்டு ஆளும் அ.தி.மு.க. அணிக்குள் கவலை பீதியை மட்டுமில்லை, கருத்து மோதலையும் கச்சிதமாகவே கிளப்பியிருக்கிறது. ஆளுநரின் ஆய்வை எடப்பாடி டீம் ‘ஒண்ணும் பிரச்னையில்ல. ஓ.கே. ஓ.கே.!’ என்று சொல்லியிருக்க, பன்னீர் தரப்போ ‘ஆனாலும் ஆளுநர் இப்படி செய்திருக்க கூடாது.’ என்று எதிர்ப்பு காட்டியிருப்பது அவர்களுக்கு இடையிலான பிரிவினையை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.
கடந்த வாரம் கோயமுத்தூர் மாவட்டம் வந்திருந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அங்கே அரசு அதிகாரிகளை வைத்து ஆய்வு கூட்டம் நடத்தினார். இதை தமிழக எதிர்கட்சிகள் கூட ‘மாநில சுயாட்சிக்கு எதிரான செயல்!’ என்று கொதித்தெழுந்து குரல் கொடுத்தனர். ஆனால் ஆளும் அ.தி.மு.க.வோ ’நோ! நோ! அப்படியெல்லாம் இல்லை. அரசாங்கம் மக்களுக்கு என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஆளுநர் அதிகாரிகளிடம் பேசியிருக்கிறார்.’ என்று அடக்கம் காட்டியது.
இந்நிலையில் ஆளும் அணியில் பன்னீர் தரப்பில் நிற்கும் மாஜி முணுசாமி ‘தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை அழைக்காமல், அனுமதிக்காமல் கவர்னர் இப்படி அரசு அதிகாரிகளை சந்தித்தது மனதுக்கு வேதனையளிக்கிறது.’ என்று ஒரு குத்துக் குத்தியிருந்தார்.
இது தமிழக பி.ஜே.பி.யை அப்செட்டாக்கிய நொடியில் “கோவையில் கவர்னர் ஆய்வு செய்தார் என்பதே தவறு. திட்டங்களை தெரிந்து கொள்வதற்காக அதிகாரிகளை சந்தித்துள்ளார்.” என்று மழுப்பலோ மழுப்பல் செய்துள்ளார்.
முதல்வரின் இந்த கருத்துக்கு இப்போது முணுசாமியிடம் பதில் கேட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அவர் வெடுக்கென ஏதாவது பேசி வைக்க, அதற்கு எடப்பாடிக்காக ஜெயக்குமார் போன்ற யாராவது நறுக், சுருக்கென முணுசாமிக்கு பதிலடி கொடுக்கையில் இரண்டு தரப்புக்கும் இடையில் மோதல் வெடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்குத்தானே ஆசைப்பட்டீர்களா புரோகித்குமாரா?